மாற்றுத் திறனாளிகளை பற்றி இழிவாக பேசுவதா? ராதாரவிக்கு கனிமொழி கண்டனம்
நடிகர் ராதாரவி மாற்றுத்திறனாளிகளைப் பற்றி இகழ்ச்சியாக, ஏளனமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை: மாற்றுத் திறனாளிகளை பற்றி இகழ்ச்சியாக பேசுவதை நடிகர் ராதாரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ராதா ரவி பேசுகையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை மாற்றுத்திறனாளிகளோடு ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

ஆனால், அவரின் இந்த பேச்சுக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் மனம் புண்படும் படி அவர் பேசியுள்ளதாகவும், அவரின் பேச்சு மனித தன்மையற்றச் செயல் எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக எம்.பி.கனிமொழி, மாற்றுத் திறனாளிகளை இகழ்ச்சியாக பேசுவதை நடிகர் ராதாரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது: ராதாரவி அவர்கள் மாற்றுத்திறனாளிகளைப் பற்றி இகழ்ச்சியாக, ஏளனமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தலைவர் கலைஞரின் தொண்டர்கள் இதை ஏற்க மாட்டார்கள். உடல் கூறுகள் வேறுபட்டு இருப்பது ஒரு சிறிய தடைதான். மன ஊனம் தான் தாண்ட முடியாத தடை. மாற்றுத்திறனாளிகள் மனத்தடைகளை உடைத்தவர்கள். இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.
நடிகர் ராதாரவி தற்போது திமுகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications