மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் ஏழைக் குழந்தைகளுக்கு பாதிப்பு: கனிமொழி தாக்கு
நெல்லை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையால் ஏழை வீ்ட்டு குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காது என திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைகளுக்கு எதிராக நெல்லையில் சிறுபான்மையினர் சார்பில் போராட்டம் நடந்தது. இதில் திமுக எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல்...
இட ஓதுக்கீடு குறித்து ஆர்எஸ்எஸ் தெரிவித்த கருத்துகளை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதன் பின்னால் உள்ள அரசியலை நாம் உணரவில்லை. இதனால் நம் பிள்ளைகள் பாதிக்கப்படும் என்பதை நாம் உணர வேண்டும்.
விபரீதம்...
கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து யாருக்கும் கிடையாது. அதே நேரத்தில் எதை சொல்லி கொடுக்கிறார்கள் என்று விழிப்போடு கண்காணிக்க வேண்டும். புதிய கல்வி கொள்கையின் விபரீதம் குறித்து முதன் முதலில் கருத்து தெரிவித்தவர் திமுக தலைவர் கருணாநிதிதான். அவர் அறிக்கை வெளியிட்ட பின்னர்தான் இதில் உள்ள சிக்கலை பிறர் உணர்ந்தனர்.
கேள்விக்குறி..
புதிய கல்வி கொள்ளை கொண்டு வருவதற்கு முன்பு மக்கள் கருத்து கேட்கப்படும் என்பதை நம்பமுடியவில்லை. புதிய கல்வி கொள்கை சமூக நீதியை கேள்விகுறியாகவும், கேலிக்குறியதாகவும் மாற்றுகிறதா என அச்சமடைய வைத்துள்ளது.
ஏழைக் குழந்தைகளுக்கு பாதிப்பு...
வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் தொழில் தொடங்க இது வாய்ப்பாக உள்ளது. கல்வியை அவர்கள் வியாபாரம் ஆக்கி விடுவார்கள். இதனால் சமானிய ஏழை வீட்டு குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காது. புதிய கல்வி கொள்கையில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்படுவது ஏன், அதை விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க அனுமதிக்க வேண்டும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.