கேரளாவுக்கு கோழிகள் கடத்தப்பட்டதைத் தடுத்த அதிகாரிகளைக் கொல்ல முயற்சி..!
குமரி: கேரளாவுக்கு கோழி கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயற்சி நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு ரேசன் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுகிறது. இதை தடுப்பதற்காக குமரி-கேரள எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசாரும், அதிகாரிகளும் கண்காணித்து வருகிறார்கள்.
பாறசாலை சோதனை சாவடியில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குமரி மாவட்டத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் வந்தது. அந்த மோட்டார் சைக்கிளின் இருபுறமும் ஏராளமான கோழிகள் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்தது.
அந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். உடனே மோட்டார் சைக்கிளில் வந்தவர் அதிகாரிகள் மீது மோதி விட்டு தப்ப முயன்றார். இதில் அதிகாரிகள் சந்திரபாபு, பிஜு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அந்த மோட்டார் சைக்கிளும் நிலை தடுமாறி கீழே விழுந்தது.
இதை பார்த்ததும் சோதனை சாவடியில் இருந்த ஊழியர்கள் விரைந்து சென்று அதிகாரிகளை மீட்டனர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் முகமது , பாறசாலையை சேர்ந்தவர் என்பதும் குமரி மாவட்டம் குழித்துறையில் இருந்து கேரளாவுக்கு கோழிகள் கடத்துவதும் தெரிய வந்தது.
அவரிடம் இருந்து 145 கிலோ எடையுள்ள கோழிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முகமதுவை நெய்யாற்றின்கரை போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காயம் அடைந்த அதிகாரிகள் 2 பேரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications