சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க எதிர்ப்பு... குமரியில் மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய உள்ள சரக்கு பெட்ட துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவளம் : கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய உள்ள சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவளம் முதல் மணக்குடி வரையிலான கடல்பகுதியில் மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இணயம் பகுதியில் சரக்கு பெட்டக வர்த்தக துறைமுகத்தை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த சரக்கு பெட்டக முனையத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வர்த்தக துறைமுகம் அமைந்தால் ஒட்டுமொத்த மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறும் எனக் கூறி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இணயம் பகுதிக்கு பதிலாக கோவளம் பகுதியில் சரக்கு பெட்டக வர்த்தக துறைமுகத்தை அமைக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
கடல் முற்றுகை
ஆனால் இந்தப் பகுதியில் அதிக மீன்வளம் இருப்பதால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மத்திய அரசுக்கு எதிராக சுமார் 40க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று சரக்கு பெட்டக துறைமுகம் அமைய உள்ள கோவளம் முதல் மணக்குடி வரையிலான கடல் பகுதியில் மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்புக் கொடி கட்டி போராட்டம்
இதே போன்று 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 1 லட்சம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். துறைமுகம் அமைக்க தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக மீனவர்கள் பைபர் படகுகளில் கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
மீனவர்களின் நிலை என்ன?
வர்த்தக துறைமுகம் அமைத்து கடல் வளத்தை அழிப்பதற்கு பதிலாக மீன்பிடி துறைமுகம் அமைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். கடலில் மட்டுமே எங்களின் பிழைப்பு என்றும் சுமார் 80 சதவீத மீன்கள் ஏற்றுமதி இந்தப் பகுதியில் இருந்து நடைபெற்று வரும் நிலையில் சரக்கு பெட்டக வர்த்தக துறைமுகத்தை அமைக்க மத்திய அரசு முயற்சிப்பது ஏன் என்றும் மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மீனவர்கள் போராட்டத்தால் பரபரப்பு
மீனவர்கள் கடலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடற்கரைப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதே போன்று கடலோர காவற்படையினரும் தொடர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான படகுகளில் கறுப்பு கொடிகளை கட்டி மீனவர்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர். கடற்கரை பரப்பில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.