மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் !
சென்னை: பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
‘கயிலையே மயிலை' ‘மயிலையே கயிலை' என்ற புகழுக்குரிய மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில், 7ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.
பார்வதி தேவி மயில் வடிவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த தலம் என்பதால் மயிலாப்பூர் என இத்தலம் புகழ் பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான இத்திருக்கோயிலில் கோசாலை அருகே உள்ள ஆதிகபாலீஸ்வரர் சன்னிதியில், இந்த தெய்வத் தம்பதிகளின் திருமணக் காட்சி ஆண்டுதோறும் நிகழ்த்தப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு திருப்பணிகள் ரூ.9 கோடி செலவில் நடந்தன. 6 மாத காலத்துக்கு மேல் தொடர்ந்து நடந்து வந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த மாதம் 29ம்தேதி தொடங்கியது. ஆகம விதிகள் படி யாக பூஜைகளை வேதவாத்தியார் பிரம்ம ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் தலைமையில், 120 சிவாச்சாரியார்கள் மேற்கொண்டுள்ளனர். 2ம் தேதி காலை 6 மணியளவில் விசேஷ சாந்தி கும்ப திருமஞ்சனமும், தீர்த்த வினியோகமும் நடந்தது.
இந்நிலையில், இன்று காலை 8.30 மணி முதல் 9.50 மணிக்குள் திருவோண நட்சத்திரத்தில், ஏகாதசி திதியில் கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளில் இருந்து மயிலாப்பூருக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கு தடையின்றி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறப்பு காவல் நிலையமும் அங்கு தொடங்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி, தீயணைப்புத்துறை, மின் வாரியம், சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய 7 துறைகள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து அறநிலையத்துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டநெரிசலை தவிர்க்க பேருந்துகளும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. சுகாதாரத்துறை தரப்பில், மருத்துவ உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆம்புலன்ஸ் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. கூட்ட நேரத்தில் மின் தடை ஏற்பட்டால், அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், 24 மணி நேரமும் மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான பணிகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது.