கல்லூரி மாணவிகள் முன் பைக் சாகசம் செய்து "சில்லரை வாரினாரே" ஒரு மாணவர்! இப்போ என்ன செய்யறாரு பாருங்க
காரைக்குடி: காரைக்குடியில் கல்லூரி மாணவிகள் முன்பு மாஸ் காட்டுவதற்காக ஓடும் பைக்கின் பின் இருக்கையில் சாகசம் செய்த போது கீழே விழுந்த இளைஞருக்கு அதே கல்லூரி பேருந்து நிலையம் முன்பு போக்குவரத்தை சரி செய்யும் பணி நூதன தண்டனையாக நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் அழகப்பா பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி காரைக்குடியில் கல்லூரி சாலையில் நண்பருடன் இரு சகக்ர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வாகனத்தை ரயில்வே ஊழியரான கோபாலகிருஷ்ணன் ஓட்டிச் சென்றார். பின் இருக்கையில் ஹெல்மெட் கூட போடாமல் மகேஸ்வரன் உட்கார்ந்து வந்தார். அப்போது கல்லூரி அருகே ஒரு பேருந்து நிறுத்தம் இருந்தது.

மகேஸ்வரன்
அந்த நிறுத்தம் வரை மகேஸ்வரன் நன்றாகத்தான் இருந்தார். ஆனால் பேருந்து நிறுத்தம் வந்தவுடன் அங்கு பேருந்துக்காக கல்லூரி மாணவிகள் காத்துக் கொண்டிருந்ததை பார்த்தார். அத்தனை பெண்கள் இருக்கும் போது கெத்தை காட்டாமல் கைகட்டி பைக்கில் போகக் கூடாது என நினைத்தார் மகேஸ்வரன்.

பந்தா
இதனால் பந்தா காட்டுவதற்காக ஓடும் பைக்கின் இருக்கையில் இருந்து எழுந்து நின்றார். அந்த வாகனத்தை ஓட்டும் கோபாலகிருஷ்ணனை பிடித்துக் கொண்டே எழுந்து நின்றார். பின்னர் கோபால கிருஷ்ணன் மீதான இரு கைகளையும் விட்டுவிட்டு டைட்டானிக் ஜாக் போல் இரு கைகளையும் நீட்டினார். உடனே பேலன்ஸ் தாங்க முடியாமல் அவர் வாகனத்தில் இருந்து இரு கால்களையும் விரித்தபடி கீழே விழுந்துவிட்டார்.

பின்புறத்தில் வலி
அவரது பின்புறத்தில் வலி ஏற்பட்டது. அவர் விழுந்ததற்கு கூட வருந்திஇருக்க மாட்டார். ஆனால் கல்லூரி மாணவிகள் முன்பு விழுந்துவிட்டோமே என அவமானமடைந்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் ஸ்லோ மோஷனில் வெளியானது. இந்த வீடியோவை எடுத்தவர் 17 வயசு நிரம்பிய ஒரு சிறுவன். இதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.

நூதன தண்டனை
பைக் சாகசத்தில் ஈடுபட்டு கீழே விழுந்த மகேஸ்வரன் மட்டும் போலீஸுக்கு பயந்து மதுரை உயர்நீதிமன்றத்தை நாடினார். உயர்நீதிமன்ற மதுரை கிளை மகேஸ்வரனுக்கு ஒரு வாரம் தினமும் மாலை 4 முதல் 6 மணி வரை காரைக்குடியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியை தண்டனையாக வழங்கியது. பந்தா காட்டுவதற்காக எந்த இடத்தில் விழுந்தாரோ அதே கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். என்னை போல் யாரும் பைக் சாகசம் செய்யாதீர்கள் என்றும் டிவி சேனல்களுக்கு ஒரு வரியில் பேட்டி அளித்தும் உள்ளார். இது போல் நடுரோட்டில் சாகசம் செய்த யூடியூபர் ஒருவருக்கு சென்னை ஹைகோர்ட் வினோத தண்டனை கொடுத்துள்ளது. அதாவது பைக் சாகசம் செய்த இளைஞருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. அது போல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் குறிப்பிட்ட காலத்திற்கு வார்டு பாய் பணி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications