சபாஷ்..! மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவைப் பணியாற்றிய நகராட்சிப்பள்ளி மாணவர்கள்!
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி மாணவர்கள் சேவைப் பணியற்றியது வரவேற்பை பெற்றுள்ளது.
சிவகங்கை: மாற்றுத்திறன் மாணவர்களுக்கு காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி மாணவர்கள் சேவைப் பணியற்றியது வரவேற்பை பெற்றுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் என்பவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது குறைந்த இயல்தன்மை கொண்டவர்கள் ஆவர். இது, உடற் குறைபாடு, புலன் குறைபாடு, அறிதிறன் அல்லது அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு தொடர்புடையதாக இருக்கும்
இந்தப் பிரச்சனை ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் திடீர் விபத்தாக ஏற்படலாம் அல்லது பிறப்பிலேயே இருக்கலாம். அரசு, தனியார் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பு பிரிவுகளை செயல்படுத்தி வருகின்றன.
நகராட்சி பள்ளி மாணவர்கள்
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் சாரண சாரணியர் மாணவர்கள் மற்றும் இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்கள் இணைந்து, இன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு கல்வியியல் பிரிவில் செயல்பட்டுவரும் சிறப்பு பள்ளியை பார்வையிட்டனர்.
பழகும் விதம் குறித்து விளக்கம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு கல்வியியல் பிரிவின் துறைத் தலைவர் முனைவர் ஜே. சுஜாதாமாலினி அனைவரையும் வரவேற்றார். அவர் அங்கு பயிலும் ஆட்டிசம், மனவளர்ச்சி குன்றியோர், மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கபட்டக் குழந்தைகள், காதுகேளாதோர் போன்ற மாற்றுத்திறன் மாணவர்களின் குறைபாடுகள் பற்றியும் அவர்கள் நடந்துகொள்ளும் முறைகள் பற்றியும், அவர்களிடம் நாம் பழகும் விதங்கள் பற்றியும் விளக்கினார்.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவிய..
மேலும் அந்தப் பள்ளியில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல் துலக்குதல், சாப்பிடும் முறைகள், தலை வாருதல், தன் சுத்தம் பேணுதல், யோகா ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுவது பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார். சாரண சாரணியர் மாணவர்களும், இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்களும் இணைந்து எழுதும் திறனுடைய மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அவர்களின் தாய் தந்தையரின் பெயர் எழுதுதல், படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், தொலைபேசி எண் எழுதுதல் போன்ற செயல்களில் அவர்களுக்கு உதவினர்.
மனித நேயத்தை வளர்க்க..
நடக்க முடியாத மாணவர்களுக்கு நடை பயிற்சியும், உணவு உண்ண முடியாத குழந்தைகளுக்கு உணவு ஊட்டியும், அவர்களுடன் இணைந்து பாட்டு பாடியும், நடனமாடியும், கூடி விளையாடியும் சேவை பணியாற்றினர். இந்நிகழ்வு சாரண சாரணியர் மற்றும் இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு சேவை மனப்பான்மையையும், மனித நேயத்தையும் வளர்க்கும் விதத்தில் அமைந்தது.
சமூகம் சார்ந்த நிகழ்வுகள்
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சாரண அமைப்பின் பொறுப்பாசிரியர் கோமதிஜெயம் அவர்களும், இளஞ்செஞ்சிலுவை சங்க அமைப்பின் பொறுப்பாசிரியர் விஜயகாந்தி அவர்களும் செய்திருந்தனர். இதுபோன்ற சமூகம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி மாணவர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.