ஒரு முறைகூட மதிக்காத கர்நாடகா- 4 டிஎம்சி நீரை எப்படித் தரும்?என்ன செய்யப் போகிறது சுப்ரீம் கோர்ட்?
காவிரி நீர் திறப்பு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு எதனையும் கர்நாடகா மதித்ததே இல்லை.
Recommended Video
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவை பிறப்பித்தாலும் அதை கர்நாடகா அரசு ஒருபோதும் மதித்ததே இல்லை. அப்படி மதிக்காத கர்நாடகா அரசு மீது உச்சநீதிமன்றமும் ஒருபோதும் நடவடிக்கை எடுத்ததே இல்லை என்பதுதான் யதார்த்தம். இப்போதும் 4 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகா மறுத்துவிட்டது. இனி என்ன செய்யப் போகிறது உச்சநீதிமன்றம்?
காவிரி பிரச்சனையில் நடுவர் மன்ற இடைக் கால தீர்ப்பு, இறுதித் தீர்ப்புகளின் படி திறந்துவிடப்பட வேண்டிய நீரை ஒருபோதும் கர்நாடகா திறந்துவிட்டதே இல்லை. இதற்காக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகாவில் நட்ட ஈடு கேட்டும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த விசாரணைகளின் போதெல்லாம் தமிழகத்துக்கு பிச்சை போடுவது போல சொற்ப அளவுகளில் டிஎம்சி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிடும். கர்நாடகா மறுக்கும். தமிழக அரசு மீண்டும் ஒரு அவதூறு வழக்கு தொடரும்.
இதை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் இன்னொரு உத்தரவு போடும். அதையும் கர்நாடகா மதிக்காது. தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும்.. அப்போதும் ஒரு கண்டிப்பான உத்தரவு வரும். அதையும் கண்டுகொள்ளாது கர்நாடகா.
தமிழகம் போராட்டத்தில் குதிக்கும். கர்நாடகாவில் தமிழர்கள் மீது கன்னடர்கள் தாக்குதல் நடத்துவார்கள். அப்போது உடனே உச்சநீதிமன்றம், இரு மாநிலங்களும் அமைதி காக்க வேண்டும் என அட்வைஸ் செய்யும். பசித்தவன் சோற்றுக்கு போராடுகிறான்... அவனும் போராடியவனை அடித்தவனும் ஒன்று என உச்சநீதிமன்றம் பார்க்கும்.
இத்தனைக்குப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற ஒரு தீர்ப்பை தந்தது உச்சநீதிமன்றம். அதை எல்லாம் ஏற்க முடியாது என மீண்டும் சட்டாம்பிள்ளைத்தனம் செய்கிறது கர்நாடகா. கேவலம் ஓட்டு அரசியலுக்காக மத்திய பாஜக அரசும் ஆமா நீங்க சொன்னது அதுவா? இதுவா? கர்நாடகாவில் தேர்தல் நடக்குது.. அமைச்சரவை ஒப்புதல் வாங்க முடியலை? என எரிகிற நெருப்பில் பெட்ரோல், டீசலை ஊற்றிக் கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் தட்டிக் கேட்காமல் சரி.. சரி.. ஒரு சொட்டு நீராவது தமிழகத்துக்கு தர வேண்டும் என்பதைப் போல 4 டிஎம்சி நீரை தர உத்தரவிடுகிறது. இந்த செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது. அதெல்லாம் தமிழகத்துக்கு நீரை தர முடியாது.. அணைகளில் நீரே இல்லை என்கிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா.
காவிரி நீரை கண்டிப்பாக திறக்க வேண்டும்; இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என சொன்னது உச்சநீதிமன்றம் என்கிறது செய்தி. ஆனால் இவ்வளவு நாளா என்ன நடவடிக்கை எடுத்தீங்க? இப்ப என்ன எடுப்பீங்களாம்? என்கிற போக்கில்தான் கர்நாடகா மீண்டும் சண்டித்தனம் செய்து கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசுதான் கையில் கோடாரியுடன் தொடர்ந்து தமிழகத்தின் முதுகில் குத்திக் கொண்டே இருக்கிறதே! எங்கே கிடைக்குமோ தமிழருக்கான நீதி?