கார்த்தியிடம் கணக்கில் வராத சொத்துக்கள் இருப்பதை நிரூபித்தால் ரூ.1க்கு விற்க ரெடி: ப.சிதம்பரம்
சென்னை: எனது மகன் கார்த்தி சிதம்பரத்திடம் மறைக்கப்பட்ட, கணக்கில் வராத சொத்து எதுவும் இருந்தால் அது குறித்த விவரங்களை மத்திய அரசு தாராளமாக வெளியிடலாம். அவ்வாறு எதுவும் இருந்தால் அவற்றையெல்லாம் ஒரு ரூபாய்க்கு அரசிடம் விற்பதற்கு அவர் தயாராக இருக்கிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய எர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் மூலம் ஆதாயமடைந்த பணத்தையே முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் 14 நாடுகளில் முதலீடு செய்திருப்பதாக அமலாக்கப் பிரிவின் ஆவணங்களை சுட்டிக்காட்டி பயோனீர் நாளேடு செய்தி வெளியிட்டது. இந்த குற்றச்சாட்டை கார்த்தி சிதம்பரம் மறுத்தார்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தை உலுக்கி வருகிறது. அதிமுகஎம்.பிக்கள் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த சில நாள்களுக்கு முன்பு எனது மகன் கார்த்தி சிதம்பரம் மீது பல பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது ஒரு திட்டமிட்டு வெளியிடப்பட்ட செய்தி என்பதை அனைவரும் அறிவர்.
கார்த்தி சிதம்பரம் குடும்பச் சொத்துகளை மேலாண்மை செய்து வருவதோடு பல முறையான வணிக நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். பல ஆண்டுகளாக வருமான வரியையும் செலுத்தி வருகிறார். ஆண்டுதோறும் வருமானம் மற்றும் சொத்துகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்து வருகிறார். அவரது அனைத்து சொத்துக்கள், மூதலீடுகள் குறித்த விவரங்கள் அனைத்தும் வருமான வரி தாக்கலின்போது இணைக்கப்படுகின்றன.
கார்த்தி சிதம்பரத்திடம் மறைக்கப்பட்ட சொத்து எதுவும் இல்லை. வருமான வரித் துறை மற்றும் பிற அரசு சட்ட திட்டங்களுக்கு உள்பட அனைத்து வணிகங்களையும் கார்த்தி மேற்கொண்டு வருகிறார். பல சொத்து விவரங்களை கார்த்தி மறைத்துவிட்டார் என கூறுவது மிகவும் தவறானது.
கார்த்தியிடம் மறைக்கப்பட்ட, கணக்கில் வராத சொத்து எதுவும் இருந்தால் அது குறித்த விவரங்களை மத்திய அரசு தாராளமாக வெளியிடலாம். அவ்வாறு எதுவும் இருந்தால் அவற்றையெல்லாம் ஒரு ரூபாய்க்கு அரசிடம் விற்பதற்கு தயாராக இருக்கிறார். கார்த்தி எனது மகன் என்பதாலே குறி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் நான் தான் அவர்களின் உண்மையான இலக்கு.
இந்த செய்தி வெளியான நேரமும், இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் நோக்கத்தையும் என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. இதை வெளியிட்டவர்கள் மீது என்னால் பரிதாபம் மட்டுமே கொள்ள முடிகிறது. இறுதியில் சத்தியமே வெல்லும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications