தமிழக காங். தலைவராகும் ப.சிக்கு செக் வைக்க கிளறப்படும் வாசன் கண் மருத்துவமனை விவகாரம்?
சென்னை: வாசன் கண் மருத்துவமனையின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்குத் தொடர்பிருக்கிறதா? கருப்புப் பண பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளதா? என்ற விவகாரம் பரபரப்பாக கிளப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தை எழுப்புவதற்கு காரணமே தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட இருக்கிற ப.சிதம்பரத்துக்கு நெருக்கடி கொடுப்பதற்காகத்தான் எனவும் கூறப்படுகிறது.
வாசன் ஹெல்த் கேர் என்ற வாசன் கண் மருத்துவமனையில் 3 லட்சம் பங்குகளை துவாரகநாதன் என்பவர் வாங்குகிறார். அவர் அதில் 1.5 லட்சம் பங்குகளை அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்துக்கு எந்த ஒரு பிரீமியமும் இல்லாமல் விற்பனை செய்திருக்கிறார். இந்த அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமானது என்கிறது ஒரு தரப்பு. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

கார்த்தி மறுப்பு
ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிதம்பரம் தரப்போ, இப்போது மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. வாசன் ஹெல்த் கேர் மருத்துவமனையில் கறுப்புப் பணம் பரிவர்த்தனை இருந்திருந்தால் அதை வெளியே கொண்டுவந்த விசாரணை அதிகாரி சீனிவாசராவுக்கு விருது கொடுத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக அவரை இவர்கள் இடமாற்றம் செய்கிறார்களே ஏன்? கறுப்புப் பணப் பரிவர்த்தனை நடந்திருந்தால் அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கைகளை முடுக்கி இருக்கலாமே? எங்களுக்கு அந்த நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பது உண்மை என்றால் எங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கலாமே? இதுவரை டெல்லியில் இருந்து நோட்டீஸ்கூட வரவில்லையே? ஏன் என்கிறது.

சிதம்பரத்துக்கு செக்
அதே நேரத்தில் ஒருசில உள்நோக்கங்களுக்காகவே இந்த விவகாரம் கிளப்பப்படுகிறது என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழக சட்டசபை தேர்தலின் போது ப.சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்க மேலிடம் முடிவு செய்துள்ளதாம். அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முன்னேற்பாடாகத்தான் சிதம்பரத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இதை கிளப்பிவிடுகிறார்களாம்.

ஜேட்லிக்கு நெருக்கடி
மேலும் பாரதிய ஜனதா கட்சியிலேயே நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிரான கோஷ்டி ஒன்று தீவிரமாக லாபி செய்து கொண்டிருக்கிறதாம். அந்த லாபியுடன் சேர்ந்து கொண்டு வாசன் கண் மருத்துவமனையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியையும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

ராஜினாமா
இதனிடையே முருகப்பா குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அழகப்பன் திடீரென வாசன் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதற்கு காரணமே கருப்பு பண பரிவர்த்தனை இருப்பதாக கிளம்பிய குற்றச்சாட்டுகள்தான் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications