ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததற்கு ஜெயலலிதாவே காரணம்: கருணாநிதி
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்விபதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மறைமுகக் குற்றச்சாட்டு:
கேள்வி:ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.) இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்காத அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய ஆதி திராவிடர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறதே; சலுகை அளிக்காத அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்:அதிகாரிகள் மீது நடவடிக்கை என்றால், அரசு மீது மறைமுகமான குற்றச்சாட்டு என்றுதான் பொருளாகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தவறுக்குக் காரணமான அதிகாரிகள், முதலமைச்சரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடவடிக்கை எடுத்திருக்க முடியுமே தவிர, தன்னிச்சையாகச் செயல்பட்டிருக்க முடியாது.
கரும்பு விவசாயிகளின் கோரிக்கை...
கேள்வி:தென்னிந்திய கரும்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 2712014 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்களே?
பதில்:அவர்களின் கோரிக்கைகள் பற்றி நான் பலமுறை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நெல் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாம். ஏக்கர் ஒன்றுக்கு பத்து மூட்டைகளுக்கும் குறைவாகத்தான் நெல் விளைச்சல் உள்ளது என்றும், அதைப்பற்றி ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டும் என்றும்; கரும்பு விலையைப் பொறுத்து, அரசாங்கம், விவசாயிகள், ஆலை உரிமையாளர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றால்தான் அவர்களுடைய பிரச்சினைகள் தீரும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.குறிப்பாக கரும்பு டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தாமதம் செய்யுமே யானால், பிப்ரவரி மாத இறுதியில் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
எனவே அரசு இனியும் தாமதம் செய்யாமல், முத்தரப்பு பேச்சுவார்த்தையினை நடத்துவதற்கு உடனே ஏற்பாடு செய்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மக்கள் நலப் பணியாளர்கள்....
கேள்வி:மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தருவது பற்றி சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி வழக்கு விசாரணை 2712014 அன்று நடைபெற்றதே; என்னவாயிற்று?
பதில்: நீதிமன்ற முடிவுக்காக காத்திருக்காமல், உடனடியாக அரசே முன் வந்து மக்கள் நலப் பணியாளர்களை பணியிலே அமர்த்த வேண்டும் என்று விரிவாக எடுத்துரைத்திருந்தேன். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் கோரிக்கை வைத்த போது, தமிழக அரசு சார்பாக ஆஜரான அட்வகேட் ஜெனரல் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க முடியாது என்று கூறியிருக்கிறார். வழக்கு விசாரணை பிப்ரவரி 10ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.