100 நாள் வேலைதிட்டத்தில் முறைகேடு... கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இறந்தவர்கள் பெயரில் பணம் பெறப்பட்டுள்ளதாகவும் திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊழலில் கைகோர்க்கும் ஊராட்சி...
டெக்கான் கிரானிகல்" ஆங்கில நாளேட்டில் 27-7-2014 அன்று முதல் பக்கத்தி லேயே இந்த முறைகேடுகள் பற்றி விரிவாகச் செய்தி வந்துள்ளது. அதில் மாநிலம் முழுவதும் பரவலாக இந்தத் திட்டத்திற்கான நிதியில் முறைகேடுகள் நடந்து வந்த போதிலும், இராமனாதபுரம் மாவட்டத்தில் இறந்து போனவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பெயர்கள் எல்லாம் எழுதப்பட்டு, அவர்கள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றியதாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து அதற்கான பணம் பெற்று சுரண்டல் நடைபெறுகிறதாம். வங்கிகள் மூலமாகத் தான் இந்தப் பணத்தைப் பெற முடியும் என்பதால், வங்கி அதிகாரிகளும், ஊராட்சி அதிகாரிகளும் கைகோர்த்துக் கொண்டு இந்த ஊழலைக் கனகச்சிதமாகச் செய்கிறார்களாம்.
முறையான ஆதாரங்கள்....
முத்துப்பாண்டி என்பவர் இதுபற்றிய ஆதாரங்களை யெல்லாம் முறைப்படி தொகுத்து, இறந்து போனவர்கள் எவ்வாறு பணியாற்றியதாகப் பணம் பட்டுவாடாசெய்யப்பட்டுள்ளது என்பதைப் பற்றித் தெரிவித்திருக்கிறார்.
உதாரணங்கள்...
உதாரணமாக அவருடைய வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வசித்த காளியம்மாள் 2013ஆம் ஆண்டில் 50 நாட்கள் பணியாற்றியதாகப் பணம் பெறப்பட் டுள்ளது. ஆனால் அந்த அம்மையார் 2011ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியே இறந்து விட்டார். மற்றொரு உதாரணம், கே. நாகநாதன் என்பவர் பணியாற்றியதாக ஊதியம் தரப்பட்டுள்ளது. ஆனால் அவர் சவுதி அரேபியாவில் பணியிலே இருக்கிறார்.
புகுந்து விளையாடிய பணம்...
அதுமாத்திரமல்ல; அரசுப் பொறுப்பிலே உள்ள வருவாய்த் துறை அலுவலர் கதிரவன் பரமக்குடி வட்டாட் சியர் அலுவலகத்திலே பணியாற்றுகிறார். ஆனால் 100 நாள் வேலைத் திட்டத்தில் அவரும் பணியாற்றியதாக பணம் தரப்பட்டுள்ளது. "டெக்கான் கிரானிகல்" செய்தியாளர், கதிரவனைப் பார்த்து இதுபற்றிக் கேள்வி கேட்ட நேரத்தில், "நான் அரசு அலுவலராகப் பணியாற்றுகிறேன். எப்படி என்னுடைய பெயரைப் பயன்படுத்தி இந்தத் தவறு நடைபெற் றுள்ளது" என்று கேட்டாராம்.
பரவலான புகார்....
பத்திரிகையிலே ஓர் இடத்திலே நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட போதிலும், பல இடங்களிலே இந்தத் திட்டத்திலே தவறுகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதில் எல்லாம் கவனம் செலுத்துவதற்கு இந்த அரசுக்கு எங்கே நேரம் இருக்கிறது? எங்கே அக்கறை இருக்கிறது?' என இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.