கருணாநிதியின் உடல்நலம் குறித்து கனிமொழியிடம் விசாரித்த ராகுல்காந்தி
கருணாநிதி உடல்நலம் குறித்து திமுக எம்.பி கனிமொழியிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு வாரம் அல்லது 10 தினங்களில் உடல் நலம் பெற்று கட்சிப் பணிகளை வழக்கம்போல் கவனிப்பார் என்று திமுகவினர் கூறி வருகின்றனர். கருணாநிதி ஓய்வெடுத்து வருவதால் அவரை யாரும் சந்திக்க வேண்டாம் என திமுக தலைமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து காங்., துணை தலைவர் ராகுல் தொலைபேசி மூலம் விசாரித்தார். கருணாநிதி உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் ஓய்வு எடுப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் கட்சி தலைவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என்றும் திமுக கேட்டு கொண்டது.
இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, குமரிஅனந்தன் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு சென்றனர். கருணாநிதி ஓய்வெடுத்து வருவதால் அங் கிருந்த ஸ்டாலினிடம் நலம் விசாரித்துவிட்டு திரும்பினர்.
கருணாநிதியின் குடும்ப நெருங்கிய உறுப்பினர்கள் மட்டும் அவரது இல்லம் சென்று பார்த்து வந்தனர். மு.க. அழகிரியும் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி கனிமொழியிடம் தொலைபேசி மூலம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
புதுவை முதல் மந்திரி நாராயணசாமி மற்றும் புதுவை அமைச்சர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி. தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, ஜெ.எம். ஆரூண், குஷ்பு, முன்னாள் எம்.பி. விசுவநாதன், நாசே. ராமச்சந்திரன் கவிப்பேரரசு வைரமுத்து, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலை வர் ஏ.எம். விக்ரம ராஜா, எஸ்.வி.சேகர் மற்றும் மாவட்டக் கழகச் செய லாளர்களும், முன்னணியினரும் நேரில் வந்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்கள்.
தொலைபேசி வாயிலாக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீர மணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கவிக்கோ அப்துல் ரகுமான், டி.கே. ரெங்கராஜன், எம்.பி., ஆகியோர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்தனர் என்று திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.