நம்பிக்கை வாக்கெடுப்பு: கருணாநிதி இன்று சட்டசபைக்கு வருவாரா?
சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக அரசியல் களம் பல்வேறு திருப்பங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
அதிமுக இரண்டாக உடைந்துவிட்டது. சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகியுள்ளார். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.
அதிமுகவின் 134 உறுப்பினர்களில் 123 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் அணியில் 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
அதே நேரத்தில் 89 உறுப்பினர்களைக் கொண்ட திமுக எடப்பாடியை எதிர்த்து வாக்களிக்கும் என தெரிவித்துள்ளது. 8 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியும் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வாக்களிக்கும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மூலம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வான திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் சட்டசபைக்கு இன்று வர வாய்ப்பில்லை.
ஆகையால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக விழும் வாக்குகள்:
திமுக- 88
காங்கிரஸ் -8
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 1
ஓபிஎஸ் அணி- 11
மொத்தம் 108 வாக்குகள்தான் எடப்பாடிக்கு எதிராக கிடைக்கும்.