14 லட்சம் பேருக்கு மட்டும் உடனடி வெள்ள நிவாரணம் ஏன்? - திமுக தலைவர் கருணாநிதி கேள்வி
சென்னை: சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 14 லட்சம் பேருக்கு மட்டும் தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்கியதற்கு என்ன காரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கையில், "வெள்ளம் வடிந்து ஒரு மாதமாகிறது. பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய பட்டியல் முறையாகத் தயாரிக்கப்படவில்லை. காரணம், ஆளுங்கட்சியினரின் தலையீடு. ஆளுங்கட்சியினர் எடுத்துத் தரும் பட்டியலை அதிகாரிகள் ஏற்க வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறார்களாம். நிவாரண பணிகள் முறையாக நடைபெறவில்லை.

நிவாரண நிதி பாகுபாடின்றி வழங்கப்படவில்லை. சென்னை மாநகரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் பேரை, நிவாரணப் பட்டியலிலே இருந்து நீக்குவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
6 மாவட்டங்களில் 30 லட்சம் குடும்பங்கள் தான் பாதிக்கப்பட்டன என்று அறிவித்திருப்பது சரியான கணக்காக தெரியவில்லை. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பாதிக் கப்பட்ட மக்கள் அனைவருக் கும் உரிய நிவாரணம் தரப்பட்டாக வேண்டும்.
பயிரிழப்பால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகள், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, பெரும் வணிகர்கள், சாலையோர வியாபாரிகள், சிறு குறுந்தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் இழப்பினையும் ஈடுகட்டும் வகையில் நிவாரண உதவி அரசின் சார்பில் தரப்பட வேண்டும்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெள்ள நிவாரணம் வழங்கியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரே குடும்பத்தில் 3 முதல் 4 பேரின் வங்கி கணக்கில் நிவாரணப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுங்கட்சிக் கவுன்சிலர்கள் மற்றும் பிரமுகர்கள் கை காண்பிக்கும் மக்களிடம் மட்டும், முழு விவரங்களைக் கேட்டதுடன், ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் வங்கிக்கணக்கு எண்களை நிவாரணப் பட்டியலில் சேர்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஒரே ஒரு ரேஷன் கார்டு வைத்துள்ள நபரின் வீட்டில் வசிக்கும் வாரிசுகளுக்கும் முறைகேடாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. குறிப்பாக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களில்தான் இதுபோன்று முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இதுபோன்று பல்வேறு முறைகேடுகளுடன் நடந்த கணக்கெடுப்புப் பணி கடந்த சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 93 ஆயிரத்து 716 குடிசைகள் முழுமையாக மற்றும் பகுதியாக சேதமடைந்துள்ளதாகவும், 25 லட்சத்து 48 ஆயிரத்து 152 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்த தாகவும் கணக்கிடப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் அரசு அறிவித்தது. இதில் 14 லட்சம் பேரின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் முதல்கட்டமாக அவர்களின் வங்கிக்கணக்கில் நிவாரணம் வரவு வைக்கப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய நிவாரண நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் மொத்தம் 30.42 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்பு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கும் அரசு, அவசர, அவசரமாக 14 லட்சம் பேருக்கு மட்டும் உடனடியாக நிவாரணம் வழங்கியதன் காரணம் என்ன என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதிலிருந்து இந்த ஆட்சியினர் தவறுக்கு மேல் தவறு செய்வதாகத்தான் கருத வேண்டும். செம்பரம்பாக்கம் ஏரித்தண்ணீரைத் திறந்துவிட்டதில் செய்த தவறை நிவாரணம் வழங்குவதிலும் செய்வதாகவே பாதிக்கப்பட்டோர் எண்ணுகிறார்கள்" என்று குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications