அன்புநாதன் போன்றோருக்கு முன்ஜாமீன் வழங்கினால்.. கருணாநிதி
சென்னை: அதிமுக அமைச்சர்களின் நண்பர் என்று கூறப்பட்ட அன்புநாதன் போன்றோருக்கு முன்ஜாமீன் வழங்குவது, செய்த முறைகேடுகளின் தடயங்களை மாற்றவும், மறைக்கவுமே பயன்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக அமைச்சர்களின் நண்பர் என்று கூறப்பட்ட அன்புநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறாரே? என்று கேள்வி கேட்டு அதற்கு அவரே அளித்துள்ள பதில்:
அதிமுக அமைச்சர்கள் மூன்று பேருக்கு மிகவும் நெருங்கிய இந்த அன்புநாதன் வீட்டிலும், குடோனிலும் சோதனையிட்டு கோடிக் கணக்கான ரூபாய், ஆம்புலன்ஸ் கார், பணம் எண்ணும் 12 இயந்திரங்கள் எல்லாம் கைப்பற்றப்பட்ட செய்திகள் எல்லாம் ஏடுகளிலே விரிவாக வெளி வந்தன. இவ்வளவுக்கும் காரணமான அன்புநாதன் கடைசி வரை தமிழக அரசினால் கைது செய்யப்படவில்லை.

மாறாக அவர் உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி, அரசு வழக்கறிஞர்களும் என்ன காரணத்தாலோ அதற்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிக்காத காரணத்தால், நீதி மன்றம் அன்பு நாதனுக்கு முன் ஜாமீன் வழங்கி, அன்றாடம் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அவர் கையெழுத்து போட வேண்டுமென்று உத்தரவிட்டது. ஆனால் இந்த அன்பு நாதன் நீதி மன்ற உத்தரவுப்படி காவல் நிலையம் சென்று கையெழுத்து போடவே இல்லை. தனக்கு உடல் நலம் சரியில்லை என்று தெரிவித்து விட்டு, காவல் நிலையத்திற்கே செல்லவில்லை.
தற்போது வருமான வரித் துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பதிவு செய்த மற்றொரு வழக்கிலும் இத்தனை நாட்கள் கழித்து, தனக்கு முன் ஜாமீன் தரக் கோரி நீதி மன்றத்தில் அன்புநாதன் பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதாம். அன்புநாதன் போன்றோருக்கு முன் ஜாமீன் வழங்குவது, செய்த முறைகேடுகளின் தடயங்களை மாற்றவும், மறைக்கவுமே பயன்படும் என்பதை அனைவரும் அறிவர் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications