அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி, வைகோ, டாக்டர் ராமதாஸ்
சென்னை: ஜெயலலிதா ஆட்சி முடிவுறும் தறுவாயில் தமிழகம் போராட்டக்களமாக மாறிக் கொண்டு இருக்கின்றது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகாதது ஏன் என்று கருணாநிதி, வைகோ, விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட எதிர்கட்சித்தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் சங்கங்களின் போராட்டங்களை அடுத்து, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இலட்சக்கணக்கானோர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஜெயலலிதா அரசு அலட்சியப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக, அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரைவுரையாளர்கள், சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 83 அரசுக் கலைக் கல்லூரிகளில் 3,445 கௌரவ விரைவுரையாளர்கள் பத்து ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்று, கடந்த 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரை செய்து இருக்கின்றது.
ஆனால், முந்தைய தி.மு.க., மற்றும் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், பல்கலைக் கழக மானியக்குழு நிர்ணயித்த ஊதியத்தை வழங்காமல், ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பயிலும் அரசு கலைக் கல்லூரிகளின் மதிப்புமிக்க பேராசிரியர்களைக் கொத்தடிமைகள் போல நடத்துவது வேதனை அளிக்கிறது.
இன்று வரையிலும் அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு எதுவும் இல்லை. எனவே, தங்கள் பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு குறித்து கோரிக்கை வைக்கும்போது, எந்த நேரத்திலும் அவர்களைப் பணி நீக்கம் செய்ய முடியும் என்று அரசு கலைக்கல்லூரி நிர்வாகத்தினர் மிரட்டி வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

வைகோ வேண்டுகோள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரைவுரையாளர்களை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதேபோல, தமிழக அரசு ஊதிய விகிதங்களை வழங்க வேண்டும்; பெண் மருத்துவர்களுக்கு ஆறுமாத கால மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள்
கடந்த பிப்ரவரி 8, 9 ஆகிய தேதிகளில் மாற்றுத் திறனாளிகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு தலைமைச் செயலாளர் அளித்த உறுதி மொழியை ஜெயலலிதா அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்தை மனிதாபிமானத்துடன் அணுகித் தீர்வு காண வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கருணாநிதி
அதிமுக ஆட்சியில் தற்போது தாக் கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், அரசின் நிதிப்பற்றாக் குறை சுமார் ரூ.36 ஆயிரத்து 740 கோடி என்றும், கடன் தொகை ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 31 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது. இது 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனையா என்று கேட்கத் தோன்றுகிறது. அரசு ஊழியர்கள் உட்பட தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் பலரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற் றப்படவில்லை.

விஜயகாந்த்
தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த 5 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் தொகுப்பாகவும், தமிழக முதலமைச்சரை பாராட்டியும் புகழ் பாடியும் எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பாகவும்தான் உள்ளது. இதில் வேறு எந்த முக்கிய அம்சமும் இருப்பதாக தெரியவில்லை.
தமிழகத்தின் நிதி நிலை 5 ஆண்டுகளில் மிக மோசமான நிலைக்கு சென்றிருப்பதைத்தான் இடைக்கால நிதி நிலை அறிக்கை உணர்த்துகிறது. நிதி ஒதுக்கீடு ஏதுமின்றி அவினாசி-அத்திக்கடவு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது ஏமாற்று வேலையாகும்.

ராமதாஸ்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு பிரிவினர்களின் கோரிக்கைகளை ஏற்கும் வண்ணம் நிதிநிலை அறிக்கையில் எதுவும் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications