ஸ்பெக்ட்ரம் ஊழல்: கலைஞர் டிவி தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் 'அனைத்தும் பொய்'- கருணாநிதி
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்புடைய கலைஞர் டிவி குறித்த தொலைபேசி உரையாடல்கள் "அனைத்தும் பொய்" என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கலைஞர் டிவி ஆதாயம் அடைந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத் ரெட்டி, இயக்குநர்களில் ஒருவரான கனிமொழி எம்.பி ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் டிவி நிர்வாக இயக்குநராக இருந்த சரத் ரெட்டி, காவல்துறை அதிகாரியாக இருந்த ஜாபர்சேட், திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக பேசிய தொலைபேசி உரையாடல்கள் முதலில் ஒரு இணைய தளத்திலும் பின்னர் டெல்லியில் ஆம் ஆத்மியின் மூத்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் பூஷனாலும் வெளியிடப்பட்டன.

இது தொடர்பாக நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:
கேள்வி: ஆம் ஆத்மி கட்சியின் பிரசாந்த் பூஷன், போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் பேசிய பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி, ஆவணங்களை திருத்தியதாக சொல்லியிருக்கிறாரே
பதில்: அது எல்லாமே பொய்.. அனைத்தும் பொய்.. அனைத்தும் பொய்..
கேள்வி: உங்கள் மீதும் குற்றச்சாட்டியிருக்கிறாரே
பதில்: மற்ற தலைவர்களிடம் இதுபோல கேள்வி கேட்க முடியுமா
கேள்வி: நிருபராக இருந்த நீங்கள் இப்படிச் சொல்லலாமா
பதில்: அதனால் தான் உங்களை மதித்து நடந்து வருகிறேன். இப்போது மதிக்கிறேன். அதனால் தான் அங்கு நின்று கொண்டிருந்த உங்களையெல்லாம் அருகில் அழைத்துப் பேசுகிறேன்.
கேள்வி: தமிழக டிஜிபி ராமானுஜத்தின் பதவிக் காலத்தை நீடித்துள்ளார்களே
பதில்: அது பற்றி எனக்குத் தெரியாது.
கேள்வி: மூன்றைவது அணியின் சார்பில், இந்தத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடப் போவதாகவும், அவர் வெற்றி பெற்றால் பிரதமர் ஆவார் என்றும் சொல்லப்படுகிறதே
பதில்: ஆனால் சந்தோஷம்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications