என் கொள்கை உறுதியை யாரும் ஐயுறத் தேவையில்லை: கருணாநிதி
சென்னை: என் கொள்கை உறுதியை யாரும் ஐயுறத் தேவையில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கேள்வி பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேள்வி: கலைஞர் அவர்களுக்கு வணக்கம்! என்ன திடீரென்று "ராமானுஜர்" மீது பக்தி ஏற்பட்டுவிட்டது; அவருடைய வரலாற்றுக் கதை; தங்கள் கைவண்ணத்தில் "கலைஞர் தொலைக்காட்சி"யில் வெளி வரப்போவதாக செய்தி வந்துள்ளதே?
கருணாநிதி:- என் கொள்கை உறுதியை யாரும் ஐயுறத் தேவையில்லை!
ஆமாம், உண்மை தான்!
"முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் அருந்தவப் பயனாய்
இராமா னுசனை ஈன்றதன்றோ?
இந்நாடு வடகலை ஏன்என எண்ணித்
தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ?"
என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, 1946ஆம் ஆண்டு திருச்சி வானொலிக் கவியரங்கில் இராமானுஜரைப் பாராட்டிப் பாடியுள்ளார். இதில் கொள்கை மாறுபாடு எதுவுமில்லை.
ஒருவரைப் பாராட்டுவதாலேயே அவருடைய அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டுவிட்டதாகப் பொருள் கொள்ளக் கூடாது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரையும், கிருபானந்த வாரியாரையும், மதுரை ஆதினத்தையும் - அவர்கள் எல்லாம் சிறந்த ஆன்மீகவாதிகள் என்ற போதிலும், அவர்களின் தமிழுக்காகவும், சாதி மதப் புரட்சிகளுக்காகவும் நாம் ஆதரிக்கவே செய்தோம். குன்றக்குடி அடிகளாரை மேலவை உறுப்பினராகவே நியமித்தோம். கிருபானந்த வாரியாரை எதிர்த்து திருவாரூர் கோயிலிலே கேள்வி கேட்ட நானே, அவருடைய திருவுருவச் சிலையை சேலத்தில் திறந்து வைத்தேன். எனவே "இராமானுஜரின்" வாழ்க்கை வரலாறு என்றதும் எதையெதையோ எண்ணி யாரும் குழப்பம் அடையத் தேவையில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications