மதுவிலக்கு சட்டம்: கருணாநிதியிடம் விளக்கம் கேட்கும் ராமதாஸ்
சென்னை: ஸ்டாலின் கூறியபடி முதல் நாளே மதுவிலக்கை தி.மு.க. நடைமுறைப்படுத்தும் என்றால் பதவியேற்ற நாளிலேயே எப்படி சட்டம் இயற்ற முடியும்? என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் கலைஞர் கடந்த 10-ஆம் தேதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றப்படும்'' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுவிலக்கு ஆணையில் தான் என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறி வந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் அதற்கு மாறாக, சட்டம் இயற்றிய பிறகு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருப்பது ஏமாற்று வேலை; மதுவிலக்கை தி.மு.க. நடைமுறைப்படுத்தப்போவதில்லை என கடந்த 11-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாற்றியிருந்தேன்.
அதற்கு பதிலளிக்காத கலைஞர், நான் கூறிய அதே குற்றச்சாற்றை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியதும் அதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று முன்நாள் வெளியிட்ட அறிக்கையில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதிலும் கூட, "தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும். மதுவிலக்கை அமல்படுத்துவதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிய பிறகும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் எண்ணமே தி.மு.க.வுக்கு இல்லை என்று பேசுவதா?'' என்று வினா எழுப்பி பழைய பல்லவியையே கலைஞர் மீண்டும் பாடியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது உண்மை தான். அதற்கான பொருள் என்ன? என்பது தான் கலைஞருக்கு நான் எழுப்பும் வினா.
சட்டப்பேரவையில் சட்டம் இயற்றித் தான் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு குறைந்தது 3 மாதங்கள் ஆகும். இதுதான் தி.மு.க.வின் நோக்கம் என்றால், மு.க. ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணத்தின் போது ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கலைஞர் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையில் தான்'' என்று சென்ற இடங்களில் எல்லாம் வீராவேசமாக முழங்கியது என்ன ஆயிற்று? ஒரு வேளை ஸ்டாலின் கூறியபடி முதல் நாளே மதுவிலக்கை தி.மு.க. நடைமுறைப்படுத்தும் என்றால் பதவியேற்ற நாளிலேயே எப்படி சட்டம் இயற்ற முடியும்? என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்க வேண்டும்.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான். இந்த இரு கட்சிகளுமே மதுவிலக்குக்கு எதிரான, மதுவுக்கு ஆதரவான கட்சிகள் தான். அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 09.04.2016 அன்று ஜெயலலிதா அறிவிக்கும் வரை மது ஆதரவு தான் அதிமுகவின் நிலைப்பாடு. அதேபோல், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று 20.07.2015 அன்று கலைஞர் அறிவிக்கும் வரை மது ஆதரவு தான் தி.மு.க.வின் நிலைப்பாடு.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று கடந்த 21.01.2016 அன்று சட்டப்பேரவையில் அறிவித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எப்படி உறுதி செய்தாரோ? அதேபோல் தான் தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமல்ல என்று 08.03.2015 அன்று செய்தியாளர்களிடம் அறிவித்து தி.மு.க.வின் நிலைப்பாட்டை ஸ்டாலின் உறுதி செய்தார். இதுதான் இந்த கட்சிகளின் உண்மை நிலை. இது ஒருபோதும் மாறாது. உண்மையில், மது விற்பனையைப் பொறுத்தவரை இரு கட்சிகளும் அறிவிக்கப்படாத கூட்டணி அமைத்திருக்கின்றன.