பறக்கும் சாலை.. ஜெ.வின் மூக்கறுத்து விட்டதே உயர்நீதிமன்றம்: கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு,
கேள்வி: சாந்தன், முருகன், பேரறிவாள் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதே? தமிழக அரசு சட்டப்படி உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறியுள்ளதே உச்ச நீதிமன்றம்?
பதில்: நான் சொல்லும் ஒரே பதில் என்னவென்றால், "முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்" (முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள் கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமை ஆகாமல் முடங்கித்தான போகும்) என்ற திருக்குறளுக்கு ஏற்ப இந்த விவகாரத்தில் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டுள்ளது.
நேற்று அந்த அம்மையார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேவையில்லாமல் திமுகவை பிறாண்டியிருக்கிறார். நான் அவருக்கு நினைவுபடுத்துவதோடு உங்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன். கடந்த 1 மாதத்திற்கு முன் நளினி பரோலில் செல்ல இந்த அரசிடம் அனுமதி கோரியபோது அதை ஏற்க மறுப்பு தெரிவித்து முடியாது என்று கூறியவர் தான் ஜெயலலிதா என்பதை யாரும் மறக்கக் கூடாது.
கேள்வி: திமுகவும், அதிமுகவும் இந்திய இறையாண்மையை சூறையாடுகின்றன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளாரே?
பதில்: ஞானதேசிகனைப் பற்றி பேசுவதற்கு நான் ஒன்றும் அவ்வளவு பெரியவன் அன்று.
கேள்வி: மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளதே?
பதில்: திமுக ஆட்சியும், மத்திய அரசும் சேர்ந்து துவங்கிய திட்டம் மதுரவாயல் திட்டம். அத்திட்டத்தை பொறாமையாலோ அல்லது வழக்கமான அதிமுவின் அதிலும் குறிப்பாக ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சியாலோ அதை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்டார்.
அது பற்றி அரசு செயலாளர்கள், விஞ்ஞானிகள், கட்டுமானப் பொறியாளர்கள் என்று பலர் எடுத்துக்கூறியும் ஜெயலலிதா அதை எல்லாம் காதில் வாங்கவில்லை. இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஜெயலலிதாவுக்கு பெரிய மூக்கறுப்பு என்றே கூறலாம்.
கேள்வி: வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டதா?
பதில்: நேர்காணல் நடக்கையிலேயே கூட்டணி பற்றி முடிவு செய்யப்படுவதை பத்திரிக்கை உலக வரலாற்றில் கண்டதுண்டா?












Click it and Unblock the Notifications