தி.மு.க. தலைவராக 11வது முறையாக கருணாநிதி தேர்வு! பொதுச்செயலராக அன்பழகன், பொருளாளராக ஸ்டாலின் தேர்வு
சென்னை: தி.மு.க.வின் தலைவராக 11வது முறையாக கருணாநிதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் தி.மு.க. பொதுச்செயலராக க. அன்பழகன், பொருளாளராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க.வின் 14-ஆவது உள்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. 65 மாவட்டங்களில் 60 மாவட்டங்களுக்கான செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பொதுக் குழு இன்று காலை 9 மணிக்கு கூடியது.
தலைவர் பதவிக்கு கருணாநிதியையும், பொதுச்செயலாளர் பதவிக்கு க.அன்பழகனையும், பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலினையும் தேர்ந்தெடுக்கும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் 60 வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்தப் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் 3 பேரும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க. தலைவராக 11வது முறையாக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கருணாநிதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது மு.க.ஸ்டாலின் உட்பட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்து முழக்கமிட்டனர்.