கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுக்கும் அறிக்கையை முதல்வர் வெளியிடாதது ஏன்?.. என்ன காரணம்?
திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தரப்பட மாட்டாது என்ற அறிக்கையை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டார்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்கப்படாது என்ற அறிக்கையை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டார். முதல்வர் பழனிச்சாமி இந்த அறிக்கையை வெளியிடாததற்கு பின் சில முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க பல லட்சம் மக்களை இந்த செய்தி துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் செய்யப்பட்ட இந்த அடக்கத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததற்கு பின் சில நபர்களும், பல முக்கியமான காரணங்களும் உள்ளன.
முதல்வருக்கு பிரச்சனை இல்லை
கருணாநிதி உடல்நிலை கடந்த வாரம் சரியில்லாமல் போன போதே மெரினாவில் இடம்கேட்டு, ஸ்டாலின் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஸ்டாலின் வைத்த கோரிக்கையை முதலில் முதல்வர் ஏற்று இருக்கிறார். அதாவது ஆளும் அதிமுக அரசுக்கும் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு இந்த விஷயத்தில் முழு சம்மதம்தான் என்று கூறியுள்ளார். ஆனாலும் இதுகுறித்து சிலரிடம் விவாதிக்க வேண்டும் என்று அப்போதே கூறியுள்ளார். இப்போது உடனடியாக முடியாது என்றுள்ளார்.
அழுத்தம் கொடுப்பதாக கூறினார்
இந்த நிலையில் கருணாநிதி இறந்த அன்று கடந்த செவ்வாய் கிழமை ஸ்டாலின் குடும்பத்துடன் சென்று முதல்வரிடம் மீண்டும் இதே கோரிக்கையை வைத்துள்ளார். இந்த முறை முதல்வர், ''எங்களுக்கு இப்போதும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் வேறு சில இடத்தில் இருந்து எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. நீங்கள்தான் அவர்களிடம் பேச வேண்டும்'' என்று கைகழுவி இருக்கிறார் முதல்வர்.
உடனே அழைத்த கிரிஜா வைத்தியநாதன்
ஸ்டாலின், முதல்வர் சந்திப்பு நடந்த சில நிமிடத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். அப்போது சட்ட சிக்கல்களால் இதற்கு வாய்ப்பில்லை என்று கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார். வேண்டுமென்றால் காந்தி மண்டபத்தில் இடமளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அறிக்கை வெளியானது
இதைத் தொடர்ந்து கிரிஜாவின் அறிக்கை ஒன்றும் அன்று மாலையே வெளியானது. அதாவது திமுக தலைவர் கருணாநிதிக்கு, மெரினாவில் இடமளிக்க முடியாது, காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் கொடுக்க தயார் என்று அறிக்கையில் கூறப்படுகிறது. இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் இந்த அறிக்கையை முதல்வர் வெளியிடாமல், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டது தான்.
முதல்வர் வெளியிடவில்லை
முதல்வர் இந்த அறிக்கையை வெளியிடாமல் இருந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
1. இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுவது தனக்கு பெரிய களங்கத்தை உண்டாக்கும் என்று முதல்வர் கருதியுள்ளார். வரலாறு முழுக்க இந்த விஷயம் பெரிய அளவில் பேசப்படும். அது தனக்கு பெரிய கரையாக மாறும் என்று நினைத்துள்ளார்.
2. எம்ஜிஆரும், கருணாநிதியும் பிரிந்து இருந்தாலும் கடைசி வரை நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்ட கருணாநிதிக்கு இடமளிக்க மறுப்பது, அதிமுகவினர் இடையே தனக்கு தலைகுனிவை ஏற்படுத்தும். ஜெயலலிதா இருந்திருந்தால் கூட இப்படி செய்திருக்க மாட்டார் என்று முதல்வர் கருதியுள்ளார்.
3. இது பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்கும், தன்னுடைய அறிக்கையே இந்த நிலையை ஏற்படுத்த கூடாது என்று நினைத்துள்ளார். இதனால் அறிக்கையில் முதல்வரின் பெயர் கூட இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
4. கடைசியாக, இந்த விஷயத்தில் பெருந்தன்மையாக இருந்தால் மக்கள் மத்தியில் அதிமுக இழந்த மதிப்பை மீட்கலாம் என்றும் ஆளும் தரப்பில் நினைத்துள்ளனர். ஆனால், அதற்கு ''மேலிடம்'' இடம் கொடுக்காததால், அறிக்கை வெளியிட்டு இன்னும் மதிப்பை இழக்க வேண்டாம் என்று பின்வாங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
மீண்டும் மீண்டும்
இந்த அறிக்கை வெளியிடப்பட்ட சில நிமிடத்தில் துரைமுருகன் மீண்டும் முதல்வரிடம் போனில் பேசியுள்ளார். ஏன் ஏற்கவில்லை என்ற கேள்வி கேட்டுள்ளார். முதல்வர், என்னுடைய கையில் எதுவும் இல்லை, பலர் கொடுத்த அழுத்தம் இது என்று கைவிட்டுள்ளார். அதன்பின்பே திமுக தரப்பு நீதிமன்ற படியேறியது.