ஹைதராபாத் தலித் மாணவர் சாவுக்குக் காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க கருணாநிதி, வைகோ வலியுறுத்தல்
சென்னை: ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
ஆந்திரா, குண்டூரைச் சேர்ந்த தலித் மாணவர் ரோகித் வெமுலா. இவர் ஐதராபாத் பல்கலைக் கழகத்தில், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சமூகக் கல்வி பிரிவில், ஆராய்ச்சி (பி.எச்.டி.) படிப்பைப் படித்து வந்தார்.
பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பில் ரோகித் வெமுலா உறுப்பினராகச் செயல்பட்டு வந்தார். அந்தப் பல்கலைக் கழகத்தில் "முஷாபர்நகர் பகி ஹை" என்ற ஆவணப் படம் ஒன்றைத் திரையிடுவது குறித்து, அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்புக்கும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ரோகித் வெமுலா உட்பட ஐந்து பேரை, பல்கலைக் கழக நிர்வாகம் "சஸ்பென்ட்" செய்தது. பல்கலைக் கழக விடுதியிலிருந்தும் இந்த ஐந்து மாணவர்களும் நீக்கப்பட்டுள்ளார்கள்.
அதனால் அந்த ஐந்து மாணவர்களும், பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளே திறந்த வெளியில் படுத்து வந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்கள், தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைப்பதற்காக பல்கலைக் கழகத் துணை வேந்தர், அப்பாராவைச் சந்திக்க பல முறை முயன்றதாகவும், அதற்கு அனுமதி தரவில்லை என்றும் கூறப்படுக்றது.
இந்த மாணவர்களுக்கு எதிராகவும், பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறும் சாதி அரசியல் தொடர்பாகவும், மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானிக்கு கடந்த ஆண்டு இறுதியில் கடிதம் எழுதியிருக்கிறார். 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி, யாகூப் மேமன் துhக்கிலிடப்பட்டதை எதிர்த்து சில மாணவர்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தியிருக்கின்றன.
அதற்கு எதிராக ஏ.பி.வி.பி., அமைப்பு செயல்பட்டிருக்கிறது. எனவே, ஏ.பி.வி.பி.க்கு ஆதரவாகவும், தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடும் தலித் மாணவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும்படி தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானிக்கு அந்தக் கடிதத்தில் எழுதியதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து தான் ரோஹித் வெமுலா உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்தும் விடுதியிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அதைத் தொடர்ந்து தான் 17-1-2016 அன்று ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர், தன்னுடைய நண்பரின் விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அதை அறிந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, பல்கலைக் கழகத் துணை வேந்தர் அப்பாராவ் ஆகியோர் காரணம் என்று மாணவர்கள் கூறுகிறார்கள்.
மாணவர்களின் புகார் அடிப்படையில், தற்கொலைக்குத் துhண்டுதல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பண்டாரு தத்தாத்ரேயா, துணை வேந்தர் அப்பாராவ், மேலவை உறுப்பினர் ராமச்சந்திர ராவ், மாணவர்கள் சுஷில் குமார், ராமகிருஷ்ணா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்மிருதி இரானியின் அலுவலகம் முன்பும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தலித் மாணவரின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நியாயமான, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
வைகோ அறிக்கை:
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு பயின்று வந்த குண்டூர் பகுதியைச் சேர்ந்த தலித் மாணவர் ரோகித் வெமுலா பல்கலைக் கழக விடுதியில் தூக்குப்போட்டு இறந்ததற்கு, அந்தப் பல்கலையில் இயங்கும் இந்துத்துவ மாணவர் அமைப்பும், அதற்கு ஊக்கமும் உதவியும் அளித்து வந்த மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, பல்கலைக் கழக துணைவேந்தர் அப்பாராவ் மற்றும் உள்ளூர் பாரதிய ஜனதா எம்.எல்.சி. இராமச்சந்தர் ராவ் ஆகியோரே காரணம் ஆவர். இவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் ஆவர்.
இப்பல்கலையில் இயங்கும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பின் சார்பில், ‘முஷாபர் நகர் பகி ஹை' என்ற ஆவணப்படத்தைத் திரையிடுவது தொடர்பாக அகிலா பாரத வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்போடு மோதல் ஏற்பட்டதாகவும், இதில் மத்திய அமைச்சர் மற்றும் உள்ளூர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் தூண்டுதலால் துணை வேந்தர், தலித் மாணவர் ரோகித் வெமுலா உள்ளிட்ட ஐந்து மாணவர்களை இடைநீக்கம் செய்து, வலுக்கட்டாயமாக விடுதியில் இருந்து வெளியேற்றி இருக்கின்றார். தங்குவதற்கு வழியற்ற நிலையில், பல்கலைக் கழக வளாகத்தில் திறந்த வெளியிலேயே அவர்கள் ஐந்து நாட்களாகத் தங்கி இருந்தனர்.
இந்துத்துவ சக்திகளின் தலித் விரோதப் போக்கு மற்றும் தமது எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில், மாணவர் ரோகித் வெமுலா மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மத்தியப் பல்கலைக் கழகத்தின் தலித் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதுடன், மாணவன் ரோகித் வெமுலா சாவுக்குக் காரணமான மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்; மத்தியப் பல்கலைக் கழழுகத்தின் துணைவேந்தரைக் iது செய்ய வேண்டும்; மாணவர் ரோகித் வெமுலா எழுதிய கடிதம், பகிரங்கமாக வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சென்னை ஐஐடியில் பெரியார் - அம்பேத்கர் மையத்தைப் பாதுகாக்கத் தமிழ்நாட்டு மாணவர்கள் கொந்தளித்து எழுந்ததைப் போல மாணவர்கள் கிளர்ந்து எழுந்து போராட வேண்டும். மத்தியப் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் என்ற போர்வையில் சமூக வகுப்புவாத மோதல்களைத் தூண்டும் வகையில் நடந்துகொள்ளும் அமைப்புகள் அதன் பொறுப்பாளர்களைக் கண்காணிக்க வேண்டும்.
தலித் உள்ளிட்ட பட்டியல் இன பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலன், உரிமை, சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் - பல்கலைக் கழக துணை வேந்தர் மற்றும் மாணவர் சாவுக்கு தொடர்புடைய இந்துத்துவா பிற்போக்கு சக்திகளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டணியின் மாணவர் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.