கிருஸ்துவ மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சென்னை: நமது நாட்டில் வாழ்கிற கிருஸ்துவ மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சமநிலையோடு வாழ்வதற்கு டிசம்பர் 25ஆம் நாளில் கிருஸ்துமஸ் விழாவை அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கிற சமூக நல்லிணக்க விழாவாக கொண்டாடவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் தங்களின் கிருஸ்துமஸ் தின வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
கிருஸ்துவ சமுதாய மக்கள் டிசம்பர் 25ஆம் நாளன்று மிகச்சிறப்பாக கொண்டாடும் கிருஸ்துமஸ் திருநாளையொட்டி தமிழகத்தில் வாழும் கிருஸ்துவ மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
1989ஆம் ஆண்டு மாநில சிறுபான்மையினர் நல ஆணையம், 1999ஆம் ஆண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், 2007ல் சிறுபான்மையினர் நல இயக்ககம் ஆகியவற்றை உருவாக்கி, சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்திட வகை செய்தது.
அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச்சட்டத்தை 2006ஆம் ஆண்டில் ரத்து செய்தது.
இந்நிலையில் அண்ணல் அம்பேத்கர் வகுத்துக்கொடுத்த இந்திய அரசியல் சாசனம் கூறும், "மதச்சார்பற்ற அரசு" எனும் கோட்பாட்டிற்கு விரோதமாகவும், "சமயச்சார்பற்ற கொள்கை என்பது போராடிப்பெற்ற உரிமை!
அரசியல் சாசனத்தினுடைய அடிச்சுவடு அதுதான்; உயிரும் அதுதான்!" என்று பண்டித நேரு கூறியதற்கு மாறாகவும் சிறுபான்மைச்சமுதாய மக்களைப்பாதிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் விடுமுறை நாளான டிசம்பர் 25 அன்று மத்திய அரசின் சில அமைச்சகங்களும், மத்திய அரசுக்கு ஆதரவான சில அமைப்புகளும் தனித்தனியே பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளதால் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினரும் கிருஸ்துமஸ் விழா கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சிலர் "இந்துத்வா" கோட்பாட்டை புகுத்த தீவிரம் காட்டுவதுடன், நாடு முழுமைக்கும் மதமாற்ற தடைச்சட்டத்தை கொண்டுவர போவதாகவும் அறிவித்துள்ளனர்.
மத்திய அரசும், மற்றைய அமைப்புகளும் நாட்டு நலன் கருதி இத்தகைய அணுகுமுறைகளை தவிர்த்திட வேண்டும்; சிறுபான்மையினர் நலன்களைக் காத்திட வேண்டும் என்பதை இவ்வேளையில் வேண்டுகோளாகத்தெரிவித்து, கிறிஸ்துவ மக்களுக்கு எனது மனமார்ந்த கிருஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்:
டிசம்பர் 25ஆம் நாளின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு கல்வி நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அன்றைய தினத்தை நல்லாட்சி தினமாக கொண்டாடுவதற்கு கட்டுரைப் போட்டி, வினா-விடை போட்டி மாணவர்களிடையே நடத்தும் படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சுற்றறிக்கை கிருஸ்துவர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிற செயலாகும். மத்திய பா.ஜ.க. அரசின் சிறுபான்மை கிருஸ்துவ மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஏற்கனவே எதிர்த்து நாம் குரல் கொடுத்திருக்கிறோம். இனியும் இத்தகைய தாக்குதல்களை தொடுக்க பா.ஜ.க. அரசு முனைந்தால் அதை முறிடியப்பதற்கு மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரளுவார்கள். நமது நாட்டில் வாழ்கிற கிருஸ்துவ மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சமநிலையோடு வாழ்வதற்கு டிசம்பர் 25-ம் நாளில் கிருஸ்துமஸ் விழாவை அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கிற சமூக நல்லிணக்க விழாவாக கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ்
உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று இயேசுபிரான் விரும்பினார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப்போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். ஆனால், அதை உணராத சில சக்திகள் நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்களை சில நாட்களாக அரங்கேற்றி வருகின்றன.
மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, நாட்டில் அமைதி நிலவவும், போட்டி பொறாமைகள் அகலவும், ஏழைகளின் துயரங்கள் அகலவும் உழைப்போம் என இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வாழ்த்துச்செய்தியில்,
தமிழகத்தில் இயேசு திருச்சபையினர் தமிழ் மொழிக்கும், ஏழை எளியோருக்கும் ஆற்றிய சேவை ஈடற்றது, உன்னதமானது. இந்தியாவில் மத வெறியை ஊக்குவித்து மனிதாபிமானத்தையும், மதச்சார்பற்ற தன்மையையும் சிதைக்கும் இந்துத்துவா சக்திகளின் அராஜகப்போக்கினை எதிர்கொண்டு முறியடிக்க இந்நன்னாளில் உறுதி ஏற்போம். தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள கிருஸ்துவ பெருமக்களுக்கு கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சரத்குமார்
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மனித மனங்களை இணைக்கும், மனித நேயத்தை வளர்க்கும் இணைப்பு சங்கிலி, அன்பு ஒன்றுதான் என்பதே ஏசுபிரானின் அவதார நோக்கமும் அவரது வாழ்வின் போதனையும். இவ்வினிய நாள் ஏசுபிரானின் அவதார சிறப்பை எடுத்துரைக்கும் நாளாக மட்டுமின்றி, அவரது போதனைகளை பின்பற்றி நாம் அனைவரும் வாழ்வாங்கு வாழும் நாளாக அமையட்டும் அன்பும் அமைதியும் தழைத்தோங்கி மனித உறவுகள் மேம்படட்டும். பிரிவினைகளும், பேதங்களும் மறைந்து சமத்துவமும், சகோதரத்துவமும் தழைக்கட்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications