விரைவில் கருணாநிதி பேசுகிறார்... ட்ரக்யோஸ்டமி குழாய் மாற்றம்
கருணாநிதி பேசுவதற்கு ஏதுவாக ட்ரக்ய்டோஸ்டமி குழாய் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு பொருத்தப்பட்டிருந்த ட்ரக்யோஸ்டமி குழாய் மாற்றப்பட்டு சிறிய அளவிலான குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கருணாநிதி விரைவில் பேச தொடங்குவார் என கூறப்படுகிறது.
ஓராண்டாக கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து முதுமையால் ஒதுங்கியுள்ளார். முதுமையால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவ்வப்போது மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார்.
கடந்த சில மாதங்களாக கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து செல்கின்றனர்.
முரசொலி அலுவலகம் மற்றும் அறிவாலயத்துக்கும் கருணாநிதி வருகை தந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு பேச்சு பயிற்சி அளிப்பதற்காக ட்ரக்யோஸ்டமி குழாய் இன்று மாற்றப்பட்டது.
சிறிய அளவிலான ட்ரக்யோஸ்டமி குழாய் தற்போது பொருத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவில் கருணாநிதி மீண்டும் கரகர குரலில் பேசுவார் என எதிர்ப்பார்புடன் இருக்கின்றனர் திமுக தொண்டர்கள்.