ஒடுக்கப்பட்ட மக்களின் குரலா 'கருப்பி என் கருப்பி' பாடல்?
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் பரியேறம் பெருமாள் படத்தின் கருப்பி என் கருப்பி பாடலின் வரிகள் நெஞ்சை குத்திக் கிழிக்கின்றன.
சென்னை: பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் பரியேறம் பெருமாள் படத்தின் கருப்பி என் கருப்பி பாடலின் வரிகள் நெஞ்சை குத்திக் கிழிக்கின்றன.
'காலா' திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பரியேறும் பெருமாள். தமிழ் வாரஇதழ் ஒன்றில் சிறுகதைத் தொடர் எழுதி வந்த மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் இது.
திருநெல்வேலி - தூத்துக்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. பரியேறும் பெருமாள் என்பது தென்மாநில மக்கள் வழிபடும் தெய்வம். கதிர் இந்த படத்தின் கதாநாயகனாகவும், ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் கருப்பி என் கருப்பி கடந்த மார்ச் 4ம் தேதி வெளியிடப்பட்டது.
மரித்துப் போகும் பிஞ்சுகளுக்காக
சந்தோஷ் நாராயணனின் குரலில் ஒலிக்கும் கருப்பி பாடலின் வரிகள் மனதை குத்திக் கிழிக்கின்றன. உலகெங்கும் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது தெரியாமேல மரித்து மண்ணாய்ப் போகும் பிஞ்சு உயிர்களுக்காக இப்பாடல் சமர்ப்பணம் என்ற வரிகளோடு பாடல் தொடங்குகிறது.
கொல்லப்பட்ட கருப்பி
சாதிப் பிரச்னைக்காக கொல்லப்பட்ட கருப்பி என்ற நாளை நினைத்து பாடுவதாக அமைந்துள்ளது பாடல். பாடல் முழுவதும் கருப்பி நாயின் முகம் அனைவரிடம் இருக்கிறது.
எளிதில் கடந்து போக முடியாது
உன்னைக் கொல்லும்போது அவன் சிரிச்சானா, நீ குரைக்கும்போது அவன் முறைச்சானா. எல்லா மனுஷனும் இங்க ஒன்னு இல்ல என்று இசையில் வரிகளில் குரலில் ரௌத்திரம், ஆற்றாமை வெளிப்படுகிறது. ஒரு உயிரை இழந்த துயரத்தின் உரையாடலாக அமைந்திருக்கிற ‘கருப்பி' பாடலை சாதாரணமாக எவராலும் கடந்து போய் விட முடியாது.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல்
'கருப்பி' பாடலில் வெளிப்படையாக ஒலிக்கும் வலியும் அடிநாதமாக கேட்கும் விடுதலை உணர்வும் மெய்சிலிர்க்கச் செய்கிறது. பாடலின் முடிவில் வரம் ஒப்பாரிப் பாடல் சோகத்தையும் வேகத்தையும் கூட்டுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பேசும் படமாக பரியேறும் பெருமாள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை கருப்பி என் கருப்பி பாடலின் வரிகள் ஏற்படுத்தியுள்ளது.