கோர்ட்டில் நேரில் ஆஜராகி தேசிய மீடியாக்கள் கவனத்தை மொத்தமாக அள்ளிய கருணாநிதி
சென்னை: அவதூறு வழக்கில் நேரில் ஆஜரானதன் மூலம், நாட்டு மொத்த ஊடகங்களின் கவனத்தையும் தன்மீது திருப்பினார் திமுக தலைவர் கருணாநிதி.
ஆனந்தவிகடன் இதழில் வெளியான கட்டுரையை அறிக்கையாக பயன்படுத்தி, முரசொலி நாளிதழில் வெளியிட்டதற்காக திமுக தலைவர் கருணாநிதி மீது முதல்வர் ஜெயலலிதா தரப்பில் இருந்து அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்ததது. இதற்கு முன்பு பல்வேறு அவதூறு வழக்குகள் கருணாநிதி மீது நிலுவையில் இருந்தாலும், இவ்வழக்கிற்காக நேரில் தானே ஆஜரவதாக அவர் அறிவித்தார்.
தேசிய சேனல்கள்
கருணாநிதி நேரில் ஆஜராகும் செய்தி வெளியானதால், என்டிடிவி, டைம்ஸ் நவ் போன்ற, தேசிய, ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களின் பிரதிநிதிகள், நிருபர்கள் கோர்ட் வளாகத்தில் குவிந்தனர். நேரடி ஒளிபரப்பு வாகனங்கள் கோர்ட் வளாகத்தின் வெளியே ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருந்தன.
நேரலையில் கருணாநிதி
காலை முதலே, கருணாநிதி கோர்ட்டுக்கு வர உள்ள தகவலை, நேரலையில், ஆங்கில தொலைக்காட்சி நிருபர்களும், தமிழ் செய்தி தொலைக்காட்சி நிருபர்கள் கூறியவண்ணம் இருந்தனர். இதனால், கருணாநிதியின் கோர்ட் வருகை மிகப்பெரிய நிகழ்வாக நாட்டு மக்கள் மத்தியில் பதிவானது.
தொண்டர்கள் எழுச்சி
கோர்ட்டுக்கு வந்த கருணாநிதியை வரவேற்க திமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர். அவர்கள் 'கருணாநிதி வாழ்க' என கோஷங்கள் எழுப்பினர். நீதிமன்றத்தின் வெளியே நடைபெற்ற இந்த நிகழ்வுகளை பார்த்த கடைக்கோடி திமுக தொண்டனுக்கும், ஒரு எழுச்சியை உருவாக்க, கருணாநிதி வருகை பயன்பட்டுள்ளது.
விஜயகாந்த்துக்கு போட்டி
ஜெயலலிதாவுக்கு எதிராக காட்டமான அறிக்கைகள், பேட்டிகள் கொடுத்து மீடியாக்கள் கவனத்தை தன்பக்கம் ஈர்த்திருந்தார் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த். ஆனால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதன் மூலம், மீடியாக்கள் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளார் கருணாநிதி.
கருணாநிதியின் ராஜதந்திரம்
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிக்கட்சி வரிசையில் இருந்தாலும், அரசியல் நிகழ்வுகளை தன்னை சுற்றி நடப்பதை போல பார்த்துக்கொள்வதில் ராஜதந்திரி கருணாநிதி என்ற பேச்சு மூத்த நிருபர்கள் மத்தியில் உண்டு. இன்றைய கோர்ட் வருகையும், அதை நிரூபித்துள்ளது.