கறுப்பு பணம்: தமிழக - கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை
கருப்பு பண பதுக்கல் எதிரொலியாக தமிழக - கேரளா எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கோட்டை: கேரளாவில் இருந்து புளியரை வழியாக தமிழகத்திற்கு கறுப்பு பணம் கடத்துவதாக வந்த தகவலையடுத்து போலீசார் தீவிர வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பாரதப் பிரதமர் அறிவித்ததைத் தொடர்ந்து கருப்பு பணத்தை ஒழிக்கும் வண்ணம் தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்த வருகிறது. கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் சிலர் தங்களிடம் உள்ள பணத்தை கடத்தி அண்டை மாநிலங்களில் கொண்டு சென்று மாற்றி வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலைத் தொடர்ந்து தமிழக - கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் புளியரையில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிரடி சோதனை நடைப்பெற்றது. இதில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட 11 இலட்சம் ரூபாய் பிடிப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதன்கிழமை கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிள்ளை தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் தமிழக எல்லை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பால் வண்டி, காய்கறி வாகனம், அரசு பேருந்துக்குள், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்த பின்னரே கேரள மாநிலத்திற்குள் அனுமதித்தனர்.
மேலும் கேரளாவை தமிழகத்துடன் இணைக்கும் 32 வழித்தடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்புப் பணியை தீவிர படுத்தி உள்ளனர்.