கொடைக்கானல் சொகுசு பங்களா.. பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹாவுக்கு சிக்கல்.. பறக்கும் நோட்டீஸ்!
கொடைக்கானல்: கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடம், சாலை அமைத்த விவகாரத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, வனத்துறை, தோட்டக்கலை துறை, போக்குவரத்து துறை, காவல்துறை என பலதுறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது மலைப்பகுதி விவசாயிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை பேசினார்கள். அப்படித்தான் பேத்துப்பாறை பகுதி ஊர் தலைவர் மகேந்திரன் பேசினார்கள். அப்போது அவர் கூறுகையில்,வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசின் விதிமுறைகளை மீறி நடிகர் பாபி சிம்ஹா மூன்று மாடி கட்டடம் கட்டி வருவதாகவும், மலைக்கிராம விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியில் செல்லும் விவசாயிகளை ஒருமையில் பேசுவதாகவும் குற்றம்சாட்டினர்.
இதேபோல் பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ், பேத்துப்பாறையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டடம் கட்டி வருவதாக புகார் எழுந்தது. மின் இணைப்பு அனுமதி இல்லாமல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசு அனுமதி பெறாமலே கட்டடங்கள் கட்டுவதாகும் அரசு அனுமதியை மீறி ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு சாலை அமைத்துள்ளதாகவும், அதனை பொதுமக்கள் பயன்படுத்தவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்கள். இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ராஜா தெரிவித்தார்.
பேத்துப்பாறை கிராம தலைவர் மகேந்திரன் கூறும் போது, கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (ஆக.21) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது திரைப்பட நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் அரசு விதிகளை மீறி, அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தோம். சாதாரண விவசாயிகள் குடிசை அமைத்தால், குச்சி ஊன்றினால் கேள்வி கேட்கும் அதிகாரிகள், நடிகர்கள் அனுமதியின்றி வீடு கட்டுவதை எப்படி அனுமதித்தார்கள் என்பது தெரியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.
இது குறித்து கொடைக்கானல் கோட்டாட்சியர் ராஜா கூறும் போது, 'விவசாய குறைதீர் கூட்டத்தில் நடிகர்கள் அனுமதியின்றி கட்டடம் கட்டுவதாக விவசாயிகள் கூறினார்கள். இது குறித்து நாங்களும் முறையாக நில அளவையர் மற்றும் அரசுத்துறை அலுவலர்களைக் கொண்டு ஆய்வு செய்வோம். அதன்பிறகே முழுமையாக தகவல் தெரிவிக்கப்படும். புகார் தெரிவிக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அந்த ஆக்கிரமிப்புகள் நிச்சயமாக அகற்றப்படும் என்றார்.
இதனிடையே கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடம், சாலை அமைத்த விவகாரத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்த உள்ளார்கள்.
இதற்கிடையே வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில், பாபிசிம்ஹா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டிடங்கள் கட்டக்கூடாது என நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதனையும் மீறி அவர் கட்டிடங்கள் கட்டியுள்ளார்கள் எனறும் அவருக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளதாக ஊராட்சி நிர்வாகத்தினர்.
இதேபோல் மற்றொரு பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ், அரசு நிலத்தில் சிமெண்டு சாலை அமைத்தது குறித்தும், கனரக வாகனங்களை பயன்படுத்தியது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும், அவருக்கும் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications