கொடநாடு கொலை, கொள்ளை - மேலாளர் நடராஜனிடம் போலீஸ் விசாரணை
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை தொடர்பாக கொடநாடு மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி: கொடநாடு ஜெயலலிதா எஸ்டேட் கொள்ளை, கொலை தொடர்பாக கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராசனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளியை கொன்று பணம் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை, கொள்ளையில் 11 பேர் ஈடுபட்டுள்ளதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுனர் கனகராஜ், விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். ஆனால் கனகராஜ் விபத்தில் சிக்கவில்லை, கொல்லப்பட்டார் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். கோவையில் சிகிச்சை பெற்று வரும் சயனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையடித்தது உண்மை
கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக கேரள மாநிலம் ஆழப்புழாவில் மனோஜ் சாமி என்பவரை கோத்தகிரி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே கேரளாவில் கைது செய்யப்பட்ட 2 பேரை காவலில் எடுத்துள்ள போலீசார், அவர்களை கொடநாடு எஸ்டேட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜெயலலிதா, சசிகலா அறைகளில் இருந்து ஏராளமான பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் அள்ளிச் சென்றதை இருவரும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

சசிகலாவிற்கு தெரியும்
கொடநாடு பங்களாவில் உள்ள பொருட்கள் குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்கின்றனர் எஸ்டேட் தொழிலாளர்கள்.
இதில், ஜெயலலிதா மரணமடைந்து விட்ட நிலையில், சசிகலாவிடம் விசாரித்தால் மட்டுமே கொள்ளை போன பொருட்கள் குறித்து தெரிய வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலாளர் நடராஜன்
கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் முழுவதையும் சசிகலாவின் விசுவாசியான மேலாளர் நடராஜ் கவனித்து வருகிறார். எஸ்டேட்டில் உள்ள பொருட்கள் குறித்து அவரி டம் சசிகலா கூறியிருக்கலாம். எனவே, நடராஜிடம் விசாரணை நடத்தினால் கொள்ளை போன பொருட்கள் குறித்த விபரங்களை அறியலாம் என்று கூறினர்.
ஏற்கெனவே, கடந்த பல மாதங் களுக்கு முன்பு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்ததாகவும், அதை மேலாளர் நடராஜ் மூடி மறைத்து விட்டதாகவும் அப்போதே, கொள்ளை முயற்சி குறித்து விசாரித்திருந்தால், தற்போது நடந்த கொலையை தவிர்த்திருக்க முடியும் என்றும் கூறினர்.

பணம், நகை கொள்ளை
ஜெயலலிதா எஸ்டேட்டில் பல கோடி ரூபாய் பணம், தங்கம், வைர கற்கள் கொள்ளைபோனதாக எஸ்.பி. முரளி ரம்பா அறிக்கையை அடுத்து கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

நடராஜனிடம் விசாரணை
கொடநாடு எஸ்டேட்டில் மேலாளராக இருந்துவரும் நடராஜன், ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையாகவும், விசுவாசமாகவும் இருந்தவர். எஸ்டேட்டில் உள்ள அனைத்து இடங்களும், பல ரகசியங்களும் நன்கு அறிந்தவர் நடராஜன் என்பதால், அவரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தொடக்கத்தில் தயங்கிய நடராஜன், தற்போது விசாரணை அதிகாரிகளுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறாராம்.

எஸ்டேட்டுக்கு வந்தது யார்?
கொடநாடு எஸ்டேட்டுக்கு யார், யார் வந்து செல்வார்கள். ஜெயலலிதா இருக்கும் போது யார் வருவார்கள், ஜெயலலிதா இல்லாதபோது யார் வந்து சென்றார்கள் எஸ்டேட்டில் அதிகமாக யார் உரிமை எடுத்துக் கொள்வார்கள் என்பது போன்ற விபரங்களை போலீசார் சேகரித்துள்ளார்களாம்.
கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது. நடராஜனின் வாக்குமூலத்தை வைத்து முக்கிய விஐபிக்கள் சிக்குவார்கள் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications