கொடநாடு கொலை: சொத்து பத்திரங்கள் என்னது... பணம், நகை உன்னது... சஜீவனின் பக்கா பிளான்
கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக போலீசாரால் சந்தேகிக்கப்படும் மர வியாபாரி சஜீவன் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் போலீசாரின் சந்தேக வளையத்திற்குள் சிக்கியுள்ள சஜீவன் பற்றி நாளுக்கு நாள் புதிது புதிதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் சசிகலாவின் பினாமியாக செயல்பட்டு வந்துள்ளதாகவும், கொடநாடு பகுதியை சுற்றி பல ஏக்கர் எஸ்டேட்கள் சஜீவன் பெயரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த சொத்துக்களின் பத்திரங்கள் அனைத்தும் கொடநாடு பங்களாவிற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த சொத்துக்களை கைப்பற்றும் நோக்கிலேயே கொள்ளை நடந்துள்ளதாகவும், பணம், நகைகளை கொள்ளையடிக்க ஆசைப்பட்ட கனகராஜையும், சயனையும் அதற்கு பயன்படுத்திக்கொண்டதாகவும் தற்போது புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சசிகலாவின் பினாமி
கொடநாடு எஸ்டேட்டை தொடர்ந்து விரிவுபடுத்த எஸ்டேட்டை ஒட்டியுள்ள பலருக்கு சொந்தமான 30 ஏக்கர் காலி இடங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களை சமீபத்தில் சசிகலா தரப்பினர் விலைக்கு வாங்கியுள்ளனர். இந்த நிலங்களை கூடலூர் பகுதியை சேர்ந்த சஜீவன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பெயரில் வாங்கியதாக கூறப்படுகிறது.
கொடநாடு வந்த சஜீவன்
ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து கொடநாடு பங்களாவிற்கு சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை. ஆனால் மர வியாபாரி அடிக்கடி இந்த எஸ்டேட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. ஏனெனில் கொடநாடு பங்களாவிற்குள் யார் அனுமதியும் இன்றி வந்து செல்லும் அதிகாரம் சஜீவனுக்கு மட்டுமே உண்டு என்கின்றனர்.
எங்கே என்ன இருக்கு
2006ஆம் ஆண்டில் இருந்தே சஜீவனுக்கு கொடநாடு பங்களா அத்துப்படியாம். சஜீவனை ஜெயலலிதா, சசிகலாவிற்கு அறிமுகம் செய்து வைத்தது முன்னாள் அமைச்சர் ஒருவர் என்கின்றனர். கொடநாடு பங்களா அறைகளில் உள் அலங்கார வேலை, ரகசிய அறைகளில் அலமாரிகள் செய்தது சஜீவன்தான் என்கின்றனர். எனவே போயஸ் தோட்டத்தில் இருந்து கொண்டு வந்து பதுக்கப்பட்ட நகை, பணம், ஆவணங்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கும் என்பது சஜீவன் மட்டுமே அறிந்த ரகசியம் என்கின்றனர்.
சொத்து ஆவணங்கள்
கடந்த மாதம் 23ம் தேதி நடந்த கொள்ளை கூட சஜீவன் மற்றும் அவரது சகோதரர் பெயரில் புதிதாக வாங்கப்பட்ட 30 ஏக்கர் சொத்து தொடர்பான ஆவணங்களையும் கொள்ளையடித்து செல்வதற்காக நடந்திருக்கிலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பணம் நகை உங்களுக்கு
ஜெயலலலிதா, சசிகலா ஆகிய இருவரின் அறைகளில் இருந்த வைரம், வைடூரியம், தங்க நகைகள், பணம் போன்றவைகளை சயன், கனகராஜ் வைத்துக்கொள்ளலாம் என்று சஜீவன் டீல் பேசியதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாடு தப்பிய சஜீவன்
கொலை, கொள்ளை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்புதான் சஜீவன் துபாய் சென்றுள்ளார். அவரது சகோதரரும் தலைமறைவாக இருக்கிறார். இவர்கள் சிக்கினால் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.