கிருஷ்ணகிரியில் உடைந்த ஏரி... ஊரை விட்டு வெளியேறிய எட்டு கிராம மக்கள்
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே தீர்த்தகிரி வலசை பெரிய ஏரி கரை உடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. இதனை அடுத்து, கிராமமக்கள் ஊரை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் காரணமாக பெங்களூரு - புஹதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 8ம் தேதி தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூர் அருகே கரையை கடந்தது. இதனால் கடலூர், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை ெகாட்டியது. பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் பகுதிகளில் பெய்த மழை காரணமாக கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டையில் 37 ஏக்கரில் அமைந்துள்ளது தீர்த்தகிரிவலசு பெரிய ஏரி. பலத்த மழையால் இந்த ஏரி நிரம்பியது. செவ்வாய்கிழமையன்று முன்தினம் மதியமே ஏரியின் கிழக்கு பகுதியில் லேசாக விரிசல் ஏற்பட்டது. நேரம் செல்ல, செல்ல விரிசல் அதிகரித்து நேற்று அதிகாலை சுமார் 20 மீட்டர் நீளத்திற்கு ஏரியில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. அப்பகுதி மக்கள் பள்ளி, கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
37 ஹெக்டேரில் அமைந்துள்ள இந்த ஏரியைச் சுற்றி, எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஜவ்வாது மலையின் அருகே ஏரி அமைந்திருந்தாலும், போதிய மழை இல்லாத காரணத்தால், கடந்த, 10 ஆண்டுகளாக தீர்த்தகிரி வலசை ஏரி நிரம்பாமல் இருந்தது. ஊத்தங்கரை மற்றும் ஜவ்வாது மலை பகுதி யில், கடந்த சில நாட்களாக கன மழை கொட்டியதால், தீர்த்தகிரி வலசை ஏரிக்கு, தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. செவ்வாய்கிழமையன்று இரவு, ஏரி முழு கொள்ளளவை எட்டியது. அப்போது, ஏரியின் கிழக்குப்புற கரை பலவீனமாக இருந்ததால், தண்ணீர் கசிய துவங்கியது. அதிகாரிகள் குழுவினர், நீர் கசிவு உள்ள பகுதியை கண்டுபிடிக்க போராடினர். ஆனால், இரவு, 9 மணி வரையிலும், நீர் கசிவு பகுதியை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஊருக்குள் வெள்ளம்
புதன்கிழமையன்று காலை,6 மணியளவில் கிழக்குப்புற கரையில் சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. காலை, 9 மணியளவில் ஏரியில், 15 அடி அளவிற்கு உடைப்பு பெரிதாகி, தண்ணீர் வெள்ளம் போல் வெளியேறியது. இதையடுத்து, ஏரியை சுற்றியுள்ள, எட்டுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு, மேடான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். பள்ளி மற்றும் மண்டபங்களில் அவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
உடைந்த ஏரி
ஜவ்வாது மலையில் இருந்து, தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்ததால், ஏரி உடைப்பை சரி செய்ய முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். ஊத்தங்கரையில் இருந்து, மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு, பல மணி நேர போராட்டத்திற்கு பின், ஏரி உடைப்பு சரி செய்யப்பட்டது. இருப்பினும், அதிக நீர் வரத்தால் உடைப்பு பெரிதானதால் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது.
8 கிராம மக்கள்
இதனால், பெங்களூர் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும், கரையோரம் உள்ள ஹரிராமன்கொட்டாய், எ.பள்ளத்தூர், வெள்ளகுட்டை, நாயக்கனூர், கென்டிகானூர் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மலைப்பாதையில் வெள்ளம்
ஏற்காட்டில் கடந்த 9ம் தேதி காலை 9 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை பெய்தது. இதனால் ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் காட்டாறு போல் பல மணி நேரம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு காட்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன. கொண்டை வளைவுகளில் சாலையின் ஒரு பகுதியே பெயர்த்தெடுத்தது போல் காணப்படுகிறது. ஆங்காங்கே மரங்கள், பாறைகள் சாலையில் விழுந்து கிடக்கின்றன.
போக்குவரத்து துண்டிப்பு
மலைப்பாதையில் பல இடங்களில் திடீர் நீரூற்றுகள் உருவெடுத்து ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஏற்காட்டில் 67 மலைகிராமங்களில் மின்கம்பங்கள் உடைந்தன. இதனால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. செல்போன் டவர்களும் சேதமடைந்ததால் எந்த தொடர்பும் இன்றி தீவு போலானது. மலைப்பாதையில் 28 இடங்களில் சாலைகள் உடைந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்காடு மலைப் பாதையில் சுமார் 400 மரங்களும், குப்பனூரில் இருந்து கொட்டச்சேடு செல்லும் ரோட்டில் 200 மரங்களும் முறிந்து விழுந்தன.