கிருஷ்ணகிரி டாஸ்மாக் பீர் பாட்டிலிலுக்குள் பாம்பு - அதிர்ச்சியடைந்த குடிமகன்கள்
கிருஷ்ணகிரி அருகே அரசு மதுபான கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் செத்த பாம்பு இருந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி: டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் பாம்பு ஒன்று செத்து மிதந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த வேலம்பட்டி என்ற இடத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் மது பிரியர் ஒருவர் பீர் வாங்கி அருந்தி உள்ளோர் . அப்போது பாட்டிலின் உள்ளே சிரிய பாம்பு ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து பீர் பாட்டில் உள்ளே பாம்பு இருந்த தகவல் அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்ததை அடுத்து சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மாக் கடை முன்பு கூடி கடையை முற்றுகையிட்டனர். இதனை அடுத்து டாஸ்மாக் கடையை குடிமகன்கள் முற்றுகையிட்ட தகவல் காவேரிப்பட்டினம் போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குடிமகன்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவியதால் டாஸ்மாக் கடையை மூடுமாறு போலீசார் கேட்டுகொண்டதின் பேரில் அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
அரசு டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் பாம்பு இருந்த சம்பவம் காட்டுத் தீ போல் பரவியதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். போதையில் இருந்த பல குடிமகன்கள் போதை தெளிந்து வீட்டுக்கு திரும்பினர்.