கூடங்குளம் 2வது அணு உலை: வெற்றிகரமாக அணுப்பிளவு சோதனை... மின் உற்பத்தி குறித்து இன்று அறிவிப்பு?
நெல்லை: கூடங்குளம் 2வது அணு உலையில் அணுப்பிளவு சோதனை இன்று நிறைவடைகிறது. எனவே, இன்று இன்று மாலையில் மின் உற்பத்தி பற்றியும், வணிக ரீதியிலான மின் உற்பத்தி குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் இந்திய-ரஷிய நாடுகளின் ஒத்துழைப்புடன் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி முதல் அணுஉலை இயங்கத் தொடங்கியது. இடையில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த அந்த அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி, தற்போது ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உற்பத்தியாகி வருகிறது.
இதற்கிடையே அங்கு 2-வது அணு உலைக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. அணு உலையின் ஒவ்வொரு கருவியும் சரியாக இயங்குகிறதா? என தனித்தனியாக கடந்த ஒரு ஆண்டாக ஆய்வு நடைபெற்று வந்தது. அதன் அறிக்கைகள் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி, அடுத்தடுத்த சோதனைகளுக்கான அனுமதியை அணுமின் நிலைய நிர்வாகம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததால் 2-வது அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பப்பட்டு, தயார் நிலையில் 2வது அணு உலை உள்ளது.
சமீபத்தில் அந்த அணு உலையில் இருந்து நீராவியை வெளியேற்றி விஞ்ஞானிகள் சோதனை நடத்தினர். அது வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மின் உற்பத்தியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை இந்திய, ரஷிய விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக ‘கிரிட்டிக்காலிட்டி' என அழைக்கப்படும் அணுப்பிளவு சோதனை நேற்றுமுன்தினம் இரவு தொடங்கியது. சுமார் 48 மணி நேரம் நடைபெறும் இந்தச் சோதனையானது அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்பதை உறுதி செய்வதற்காக நடத்தப்படுவது ஆகும்.
இந்தச் சோதனை தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. இன்று இரவு 8 மணியளவில் இந்த சோதனை முடிவடைய இருக்கிறது. எனவே, இன்று இன்று மாலையில் மின் உற்பத்தி பற்றியும், வணிக ரீதியிலான மின் உற்பத்தி குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய முக்கிய அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் முகாமிட்டு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அணுப்பிளவு சோதனையின் முடிவுகள் பற்றி அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கும், மேல் அதிகாரிகளுக்கும் அவர்கள் அறிக்கைகள் அனுப்பி வருகின்றனர்.
இதனால், கூடங்குளம் 2-வது அணுஉலை மின் உற்பத்தியை தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது. இந்த அணு உலையில் முதலில் 300 மெகாவாட் அளவுக்கே மின்சாரம் கிடைக்கும். அதனைத் தொடர்ந்து மின் உற்பத்தியை உயர்த்துவது குறித்து மேற்கொண்டு பரிசோதனைகள் நடத்தப்படும். இதனால், அங்கு ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி என்ற நிலையை எட்டுவதற்கு மேலும் சில மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.
இதன்படி, இந்த 2-வது அணு உலையில் கிடைக்கும் மின்சாரமானது ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.