குலசை தசரா விழா செப் 24ல் துவக்கம்: இரும்பு ஆயுதங்களுக்கு தடை
தூத்துக்குடி: குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மமன் கோவிலில் வரும் 24ஆம் தேதி தசரா விழா துவங்குகிறது. சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.
தசரா விழாவிற்கு வேடமணிந்து வரும் பக்தர்கள் இரும்புத்தடி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டுவர போலீசார் தடை விதித்துள்ளனர்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை அடுத்த குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.
கொடியேற்றம்
தசாரா விழாவை ஒட்டி செப்டம்பர் 24ஆம் தேதியன்று காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் திருவீதியுலாவும், காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு கொடியேற்றம நடக்கிறது.
காப்புக்கட்டுதல்
பின் மஞ்சள் பூசப்பட்ட திருகாப்பூம், விரதம் இருந்து வேடம் அணியும் பக்தர்களுக்கு அணிவிக்கப்படும்.
அம்மன் வீதி உலா
தசரா திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் விசுவகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதிகிருஷ்ணன், மகிசாசுரமர்த்தினி, அனந்த நடராஜர், கஜலெட்சுமி, கலைமகள் போன்ற திருக்கோலங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
மகிஷாசூரசம்ஹாரம்
அக்டோபர் 3ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிசாசூரம்ஹம்காரம் செய்யும் காட்சி நடக்கிறது.
வேடமணிந்த பக்தர்கள்
தசரா திருவிழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 400க்கு மேற்பட்ட தசரா குழுக்கள் காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவார்கள்.
தமிழக, கேரள மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கார், வேன், லாரிகளில் தனிதனியாகவும், குழுவாகவும் வருவார்கள்.
தசரா குழுக்களுக்கு ஆலோசனை
இந்நிலையில் தசரா குழுக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் கோவில் கலை அரங்கில் நடந்தது. இதற்கு குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை வகித்தார். இதில் பல்வேறு தசரா குழு தலைவர்கள், பல்வேறு இந்து அமைப்புகள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆயுதங்களுக்குத் தடை
தசரா குழுவினர்கள் மற்றும் வேடமணிந்த பக்தர்கள் கோவிலுக்கு வரும் போது இரும்பினால் செய்யப்பட்ட எந்தவிதமான இரும்பு ஆயுதங்களும் கொண்டு வரக்கூடாது. மற்றும் கம்பு, தடி போன்ற ஆயுதங்களும் கொண்டு வரக்கூடாது. மீறி கொண்டுவந்தால் அதனை போலீசார் பறிமுதல் செய்யவேண்டும். அதனை கொண்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பக்தர்களின் வசதிக்காக கடற்கரையில் தற்காலிக மருத்துவமனை அமைக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications