சசிகலா புஷ்பாவின் 'நாடார்' பேச்சுக்கு செக்... அதிமுகவில் குமரி ஆனந்தன் ஐக்கியம்?
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான குமரிஆனந்தன் விரைவில் அதிமுகவில் இணையக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரிஆனந்தன். இவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக தலைவராக இருக்கிறார். குமரி ஆனந்தனின் சகோதரர் வசந்தகுமார், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
கறிவேப்பிலையாக...
என்னதான் மூத்த தலைவராக இருந்தாலும் குமரி ஆனந்தனுக்கு காங்கிரஸில் எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் பத்தோடு பதினொன்றாக கறிவேப்பிலையாக அவர் இருந்து வருகிறார்...
சசிகலா புஷ்பா பேச்சு
இந்த நிலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கை சரிகட்டும் வகையில் இம்மாவட்டங்களில் கணிசமாக உள்ள நாடார் சமூகத் தலைவர்களை வளைக்கும் முயற்சியில் அதிமுக இறங்கி உள்ளது. ஏற்கெனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, நாடார் சமூகத்தின் ஆதரவு தமக்கு இருப்பதாக கூறி வருகிறார்.
செக் வைக்க குமரியார்..
இதற்கு செக் வைக்கும் வகையில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த குமரிஆனந்தன் போன்ற மூத்த அரசியல்வாதிகளை வளைத்துப் போட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் அதிமுக தரப்பு. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிமுகவுக்கு தாவிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்தது. அதைப் போல குமரிஆனந்தனுக்கும் முக்கியத்துவம் தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளதாம்.
பிர கட்சி பிரபலங்கள்..
குமரி அனந்தனுடன் தென்மாவட்ட சமூகங்களைச் சேர்ந்த பிற கட்சி நிர்வாகிகளை வளைப்பதிலும் அதிமுக தரப்பு படுமும்முரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.