திமுக - காங். கூட்டணி உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் .... மயிலையில் களமிறங்குகிறார் குஷ்பு?
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்க யாருடன் யார் கூட்டணி என்பது முதல் வேட்பாளர்கள் இவர்கள்தான் என்பது வரை நாளுக்கு நாள் பரபரப்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. ஆளுங்கட்சியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் திமுக முகாம், தனது தரப்பு செய்திகளை படு ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்பட்டாலும் அங்கிருந்தும் சில ரகசியங்கள் கசிந்து கொண்டுதான் இருங்கின்றன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையின் 16 தொகுதிகளிலும் அதிமுக களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு போட்டியாக தனது தரப்பில் இருந்து 13 வேட்பாளர்களை திமுக களமிறக்கப் போவதாகவும் 3 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தரப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் சிறப்பம்சம் என்னவெனில் குஷ்புவிற்கு சீட் தரக்கூடாது என்று திமுக கறார் கன்டிசன் போட்டுள்ளதாக சில வாரங்களாகவே தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனால் இந்த உத்தேச பட்டியலில் மயிலாப்பூர் தொகுதியில் குஷ்பு போட்டியிட உள்ளதாக அந்த உத்தேச பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூரில் ஸ்டாலின்
சென்னை கொளத்தூரில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிட முடிவு உள்ளதாக தெரிகிறது. மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் குஷ்பு பெயர் உத்தேசப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆயிரம் விளக்கு ஜின்னா
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவான ஜெ.அன்பழகனுக்கே மீண்டும் வாய்ப்பு எனவும், ஆயிரம்விளக்கு தொகுதியில் ஏ.ஏ. ஜின்னா போட்டியிடுவார் எனவும் தெரிகிறது. இதுபோல், துறைமுகம் தொகுதியில் பி.கே. சேகர்பாபுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் கூட்டணி
ராயபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராயபுரம் மனோ, ஆர்.கே.நகர் தொகுதியில் சியாமளா முத்துச்சோழன் அல்லது ஏ.டி.எஸ்.மணி, விருகம்பாக்கம் தொகுதியில் கே.கே.நகர் தனசேகரன் அல்லது வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவின் மகன் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவின் பெயர் உத்தேசப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
நடிகர் சந்திரசேகர்
வில்லிவாக்கம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதன், வேளச்சேரியில் நடிகர் வாகை சந்திரசேகர் மற்றும் ஆலந்தூர் தொகுதியில் ஆர்.எஸ். பாரதி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
தாம்பரத்தில் ராஜா
இதுபோல், தாம்பரம் தொகுதியில் எஸ்.ஆர். ராஜா, பல்லாவரத்தில் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யசோதா ஆகியோரின் பெயர் திமுக கூட்டணியின் உத்தேச வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு தொகுதியில் ஆப்பூர் வரலட்சுமி மதுசூதனன் போட்டியிடப் போவதாகவும், திருப்போரூர் தொகுதியில் மாமல்லபுரம் விசுவநாதன் அல்லது தமிழ்மணி போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. செய்யூர் தொகுதியில் ஏழுமலை அல்லது செல்வமும், உத்திரமேரூர் தொகுதியில் சுந்தரும் போட்டியிடுவார் என்றும் அந்த லிஸ்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் சன் பிராண்ட் ஆறுமுகமும், கும்மிடிப்பூண்டியில் கி.வேணுவும், பொன்னேரியில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் அல்லது வல்லூர் ரமேஷ்ராஜ் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
திருத்தணி
திருத்தணியில் சந்திரனும், திருவள்ளூரில் வி.ஜி.ராஜேந்திரனும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. பூந்தமல்லியில் பரந்தாமனும்,
மதுரவாயல் தொகுதியில் காரப்பாக்கம் கணபதியும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
வெளியானது எப்படி?
அம்பத்தூர் தொகுதியில் ஜோசப் சாமுவேல் அல்லது அம்பத்தூர் செ.ஆஸ்டின் போட்டியிடுவார் என்றும் மாதவரம் தொகுதியில் சுதர்சனமும்,
திருவொற்றியூர் தொகுதியில் என்.ஆர்.தனபாலன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் வெளியானது எப்படி என்பது பற்றித்தான் இப்போது திமுக முகாமில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.