சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது எம்.எல்.ஏக்களை கடத்தியதாக கூவத்தூர் போலீஸ் அதிரடி வழக்கு!
சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது எம்.எல்.ஏ.க்களை கடத்தியதாக கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா மற்றும் ஆட்சி அமைக்க உரிமை கோரிய எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது எம்.எல்.ஏக்களை கடத்தியதாக கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.
அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா தாம் முதல்வராக வேண்டும் என்பதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களை கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைத்தார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று வரை கடந்த 8 நாட்களாக கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில்தான் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து தப்பி முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அப்போது கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து மாறுவேடத்தில் தாம் தப்பி ஓடிவந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். மேலும் கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் மன்னார்குடி குண்டர்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர் எனவும் சரவணன் கூறியிருந்தார்.
இதையடுத்து தமிழக காவல்துறை இயக்குநரை நேரில் சந்தித்து தாம் கடத்தி வைக்கப்பட்டிருந்ததாக சரவணன் எம்.எல்.ஏ. புகார் கூறினார். இந்த புகாரின் பேரில் கல்பாக்கத்தையடுத்து கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது எம்.எல்.ஏ.க்களை கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சசிகலா புறப்பட்டுச் சென்றுள்ளார். தம்மை முதல்வராக பதவியேற்க ஆளுநர் எந்த நேரத்திலும் அழைப்பார் என எதிர்பார்ப்புடன் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications