தொழிலாளர் நலனில் அக்கறை இல்லாத ஆட்சி நடைபெறுகிறது.. மே தின விழாவில் ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னையில் திமுக சார்பில் கொண்டாடப்பட்ட மேதின விழாவில் பங்கேற்ற ஸ்டாலின்,தமிழக அரசு உடனடியாக விவசாயத் தொழிலாளர்களின் நலன் காக்க கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சென்னை: மே தின விழாவை, சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில், திமுக கொண்டாடியது.அதில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,'விவசாயத் தொழிலாளர்களின் நலனில் மத்திய மாநில அரசுகள் அக்கறைகொண்டு செயல்படவேண்டும்'என்று வலியுறுத்தினார்.
திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.சங்கம் சார்பில் மேதின விழா இன்று கொண்டாடப்பட்டது.மேதின பூங்காவில் அதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இதனையடுத்து இன்று காலை மேதின பூங்கா வந்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

தொழிலாளர்கள் நினைவுத் தூணுக்கு மலர் தூவி மரியாதை செய்த ஸ்டாலின் பூங்காவில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பேசினார்.அப்போது அவர்,"இந்த மேதின பூங்காவைக் கொண்டுவந்தவர் திமுக தலைவர் கருணாநிதி.விபிசிங் பிரதமராக இருந்தபோது மேதின விழாவை இந்தியா முழுக்க கொண்டாட செய்தவர் கருணாநிதி.
இப்போது தொழிலாளர்கள் நலனில் அக்கறையில்லாத ஆட்சி நடக்கிறது.விவசாயிகள் மாதக்கணக்கில் போராடுகிறார்கள்.அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் நான் டெல்லி சென்று ஆதரவை தெரிவித்தேன். அதன் பிறகே அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்தது.அதில் அதிமுக,பாஜக தவிர அனைத்துக்கட்சிகளும் கலந்துகொண்டன.அதன்பின்னர் கடந்த 25ம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்திய அளவில் இப்படி ஒரு போராட்டம் நடந்தது இல்லை. முழு வெற்றியைப் பெற்றோம். எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக விவசாயத் தொழிலார்களின் நாளின் அக்கறை காட்டி அவர்களின் நலன் காக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications