கருணாநிதிக்காக கவி பாடிய பெண் ஏட்டு.. டிரான்ஸ்பரை பரிசாக அளித்த காவல்துறை!
Recommended Video
திருச்சி: கருணாநிதிக்கு இரங்கற்பா பாடிய பெண் காவலர் செல்வராணி ராமசந்திரன் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். அரசியல், இலக்கியம், எழுத்து, வசனம் என பன்முகத் திறமை கொண்டவர். அரசியலை தாண்டி அவர் இலக்கியத்தால் அனைவராலும் விரும்பப்படுபவர்.
ஏராளமான இலக்கியங்களுக்கு உரை எழுதியவர் கருணாநிதி. இது போல் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளம். இந்நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது அவருக்கு ஏராளமான காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதுபோல் திருச்சியை சேர்ந்தவர் செல்வராணி ராமச்சந்திரன். அவர் திருச்சியில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு கவிஞர். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடக்கும் கவியரங்கம், பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருகிறார்.
எனவே கருணாநிதிக்காக இரங்கற்பா எழுதி தமிழக அரசால் டிரான்ஸ்பர் நடவடிக்கைக்குள்ளாக்கப்பட்டார். அவர் திருச்சி நுண்ணறிவுப்பிரிவில் இருந்து மத்திய மண்டல காவல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் எழுதிய இரங்கற்பா பின்வருமாறு:
தமிழ் பேசிய என் தமிழா
தமிழ் பேசிய என் தமிழா
என் தமிழே என் உயிரே என் தங்கமே
தாங்க முடியாமல் தவிக்கிறது மனது
தாங்க முடியாமல் தவிக்கிறது மனது
அரசியல் பிழைத்தாய்
அதற்காக நான் அழவில்லை
நீ அரசியல் பிழைத்தாய் என்பதற்காக நான் அழவில்லை
அரசியல் அறியாதவள் நான்
உன் அரசியல் அறியாதவள் நான்
ஆனால் உன் ஆணவத் தமிழ் அறிந்திருக்கிறேன்
உன் ஆணவத் தமிழ் அறிந்திருக்கிறேன்
எப்படி போனது உனது உயிர்
எப்படியப்பா போனது உனது உயிர்
இனி எனது தமிழை தாங்கிப் பிடிக்க
தரணியில் மூத்தவர் இல்லையே அப்பா
இனி எனது தமிழை தாங்கிப் பிடிக்க
தரணியில் மூத்தவர் இல்லையே அப்பா
செம்மொழி தந்து தமிழை சிறப்பாய் வளர்க்க
இனி உன் இடத்தை பூர்த்தி செய்ய
உலகத்தில் ஒருவரும் இல்லையே அப்பா கலைஞன்
இந்த உலகத்தில் ஒருவரும் இல்லையே அப்பா கலைஞன்
சிலப்பதிகாரத்தை நாடக காப்பியம் ஆக்கினாயே அப்பா
சிலப்பதிகாரத்தையே நாடக காப்பியம் ஆக்கினாயே அப்பா
கண்ணகியாய் கதறுகிறேன் என் கண்ணீர் துடைக்க வருவாயா அப்பா
கண்ணகியாய் கதறுகிறேன் என் கண்ணீர் துடைக்க வருவாயா
நீ வயதானதால் இறந்தாயா
எத்தனை வயதானாலும் எனக்கும் தமிழுக்கு நீ தலைவன்தானே
என் தமிழுக்கு தகப்பன்தானே அப்பா நீ
நான் ஒரு மதுகலயம் என் பால் விழுந்த ஈக்கள் எழுந்ததே இல்லை என்று எழுதினாயே நீ
என்று அவர் அழுது கொண்டே இரங்கற்பா வாசித்துள்ளார். இந்த கவிபாவின் வீடியோ சுமார் 5.44 நிமிடங்கள் ஆகும். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இவர் கவிச் செல்வா என்று சமூகவலைதளங்களில் கவிதையை பகிர்ந்துள்ளார்.
இதே போல் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய ஒரு காவலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.