ஜெயலலிதாவின் அருப்புக்கோட்டை தேர்தல் பிரசாரத்தில் பெண் போலீஸ் மயக்கம்
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மயக்கமடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலிச்சிகுடி பைபாஸ் சாலையில் கடந்த வாரம் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. காலை 11.30 மணி முதலே அதிமுக தொண்டர்கள், பொதுமக்களை மேல்மட்ட அதிமுக நிர்வாகிகள் அழைத்து வந்து, கம்பங்களால் அடைக்கப்பட்ட தடுப்புகளுக்குள் உட்கார வைத்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டெரிக்கும் வெயிலில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்திருந்ததால் கடும் அவதிப்பட்டனர்.

தண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் ஆண், பெண், காவல் பணிக்கு வந்திருந்த போலீசார் உள்ளிட்ட அனைவரும் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மக்கள், கூட்டத்தில் இருந்து வெளியேற முயன்றனர். கூட்டத்தில் இருந்து வெளியே யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதையும் மீறி அங்கிருந்தவர்கள் வெளியேற முயன்றதால் தள்ளு முள்ளு நெரிசல் ஏற்பட்டது. இதில், சிதம்பரம் 31வது வட்டம் தெற்கு வாணியதெருவை சேர்ந்த அதிமுக உறுப்பினர் கருணாகரன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தனர்.
பொதுக்கூட்டத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அருப்புக்கோட்டையில் ஜெயலலிதா மேற்கொண்ட பிரசாரத்திலும் இதுபோன்ற அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது.
அருப்புக்கோட்டை தேர்தல் பிரச்சார பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பெண் சிறப்பு போலீஸ் எஸ்.ஐ. வெயில் தாங்காமல் மயங்கி விழுந்துள்ளார். சிகிச்சை பெற்ற பிறகு அவர் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கோடை வெயில் சுட்டெரிக்கும் இக்காலகட்டத்தில் தேர்தல் நடைபெறுவது அரசியல்வாதிகள், பொதுமக்களுக்கு மட்டுமின்றி போலீசாருக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications