பாமக நிறுவனர் ராமதாஸ் மகள் மீதான நில அபகரிப்பு வழக்கு: விழுப்புரம் போலீசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி மீதான நில அபகரிப்பு வழக்கில் ஒரு வாரத்துக்குள் விழுப்புரம் போலீசார் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டிவனத்தைச் சேர்ந்த ஆனந்தாயி என்பவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் திண்டிவனம், கோனேரிகுப்பத்தில் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 90 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஸ்ரீகாந்தி மோசடி செய்துவிட்டார்; இது குறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமக்கு மிரட்டல் வருவதால் தக்க பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த கோனேரிகுப்பத்தில்தான் ராமதாஸ் மனைவி பெயரில் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், இதுகுறித்து திங்கள்கிழமைக்குள் விளக்கம் அளிக்குமாறு விழுப்பும் நிலஅபகரிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையையும் வரும் திங்கள்கிழமைக்கு நீதிபதி பிரகாஷ் ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications