சென்னையில் வாக்குவாதத்தின் போது மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு... 16 பேர் கைது
சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புரசைவாக்கம் பொன்னப்பன் தெருவை சேர்ந்த சிலர் நேற்று இரவு அப்பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதுவது போல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வெளியே பேசி கொண்டிருந்தவர்களுக்கும், காரில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, காரில் இருந்த நபர்கள், வெளியே இருந்த இளைஞர்களை இரும்பு பைப், அரிவாள், செங்கல், உருட்டு கட்டையால் பயங்கரமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த முகமது ரியாஷ் (19), முகமது தாகா (22), முகமது இசாக் (21) ஆகியோர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.காயமடைந்த 3 பேரும் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பேரி போலீசார், காரில் இருந்த நபர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஷாகுல் அமீது (36) மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.
இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சாகுல் அமீது மற்றும் அவரது கூட்டாளி உள்பட 16 பேர் கைது செய்த போலீஸார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.