தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதாம்... பட்ஜெட் உரையில் ஆதாரம் காண்பித்த ஓ.பி.எஸ்
சென்னை: தமிழகத்தில் இடதுசாரி தீவிர சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளன என்றும், சட்டம்-ஒழுங்கு மிக சிறப்பாக இருப்பதாகவும் பட்ஜெட் உரையில் தெரிவித்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
பட்ஜெட் உரையில், பன்னீர்செல்வம் கூறியதாவது: அமைதி, வளம், வளர்ச்சி என்பது 'அம்மா' தாரக மந்திரம். உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து சட்டம்-ஒழுங்கு, மத நல்லிணக்கத்தை காத்து வருகிறார்.
சாதி, மதம் சார்ந்த பூசல்களை காவல்துறையினர் தேவையான அளவு வலிமையை மட்டும் பயன்படுத்தி திறமையாக கையாள்கிறார்கள்.
சிறப்பான நுண்ணறிவு பிரிவு தமிழகத்தில் உள்ளது. 10 எல்லையோர மாவட்டங்களில், நக்சல்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், இடதுசாரி தீவிர சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளன.
நாட்டிலேயே முதல்முறையாக, தமிழகத்தில்தான் 13 கடலோர மாவட்டங்களில் 500 மீனவ இளைஞர்களை கடற்கரை ஊர்க்காவல் படைக்கு தேர்ந்தெடுத்துள்ளோம்.
கும்பகோணம் மகாமகம் திருவிழாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, முறையாக சென்று தடங்கல் இன்றி புனித நீராட காவல்துறை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. காவல்துறையின் சிறந்த செயல்பாட்டுக்கு, இந்த திருவிழா ஒரு சிறந்த உதாரணம்.
அனைத்து காவல் நிலையங்களும் அரசு கட்டிடத்தில் இயங்குவதை உறுதி செய்யும் நோக்குடன், தற்போது தனியார் கட்டிடங்களில் இயங்கி வரும் 64 தனியார் காவல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாப்பு, கண்காணிப்பு உபகரணங்கள், வாகனங்கள் வழங்கி காவல்துறை நவீனம் செய்யப்படும். இதற்காக ஏற்கனவே, ரூ.50.1 கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. தற்போது, திருத்த பட்ஜெட்படி, இதற்கு ரூ.68.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குற்றங்களை கண்காணிக்க கணினி இணைப்பு திட்டத்தின்கீழ் 1482 காவல் நிலையங்கள், காவல்துறை உயர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக ரூ.22.14 கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின், வீட்டுவசதி தேவையை நிறைவேற்ற ரூ.422 கோடி செலவில் இந்த நிதியாண்டில் 2673 வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.