ஹைய்யா தேர்தல் முடிஞ்சு போச்சு... உற்சாகத்தில் ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ்
சென்னை: அக்னி வெயிலை விட தகித்தது தமிழக தேர்தல் களம்... மார்ச் முதல்வாரம் தொடங்கி ஏப்ரல் 24 தேர்தல் நாள் வரை ஒரே அலைச்சல்தான் அரசியல் தலைவர்களுக்கு.
குளு குளு ஏசியில் அமர்ந்து வேலை பார்த்த அரசியல் கட்சியினர் கூட அனல் பறந்த வெயிலில் சலிக்காமல் வாக்கு சேகரித்தனர்.
பல்லாயிரம் கிலோமீட்டர்கள் சாலை வழியே பயணித்து மக்களை சந்தித்தனர். இதே தேர்தல் முடிந்துவிட்டது. ரிசல்ட்டுக்கு இன்னும் இரண்டு வாரம் வரை இருக்கிறது. அடுத்தது என்ன சில முக்கிய தலைவர்கள் சொல்வதை கேளுங்களேன்.
நல்லா தூங்கணும்… அன்புமணி
தர்மபுரி தொகுதியில் அலையோ அலை என்று வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் அன்புமணி, நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
மகளின் பிறந்தநாள்
தூக்கத்திற்குப் பின்னர் அடுத்த கட்டமாக இரண்டாவது மகளின் பிறந்தநாளை நன்றாக கொண்டாட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
போன வருஷம் மிஸ் ஆயிருச்சி
கடந்த ஆண்டு மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதிபதி முன்பு நின்ற நேரத்தில் என் மகள் கேக் கட் செய்தால் அதை மறக்க முடியாது. இம்முறை நன்றாக கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளார்.
குடும்பத்தோட டூர்
அதோட மட்டுமல்லாது இவ்வளவு நாள் குடும்பத்தை கவனிக்காமல் விட்டதற்கு, மனைவி மகள்களோடு டூர் கிளம்ப வேண்டியதுதான் என்றும் உற்சாகத்தோடு கூறுகிறார் அன்புமணி.
ஸ்டாலின் நம்பர் 1
தேர்தல் பிரசார பயணம் போனதில் அதிக கிலோமீட்டர்கள் பயணித்தவர் ஸ்டாலின். கிட்டத்தட்ட 8500 கிலோமீட்டர்கள் வரை சாலை வழியே பயணித்து வெயிலில் பிரசாரம் செய்துள்ளார்.
ஜில்லுன்னு மலை தேசம்
இன்னும் ஓய்வை பற்றி யோசிக்கவில்லை... குடும்பத்துடன் ஜில்லுன்னு மலைபிரதேசம் போய் வரலாம் என்று கூறியுள்ளார் ஸ்டாலின். ரிசல்ட் வரும் வரைக்கும் ஓய்வை பற்றி யோசிக்க முடியாதே என்கிறார் சிரித்துக் கொண்டே.
ஜி.ராமாகிருஷ்ணன் ஏக்கம்
தேர்தல் பிரசாரம் போனதில் நிறைய படிக்க முடியாமல் போய்விட்டது. விட்டுப்போன புத்தகங்களை படிக்கவேண்டும் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்.
கட்சி வேலையில் கவனம்
அடுத்ததாக கட்சி வேலையிலும் கூடுதலாக கவனம் செலுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார் ஜி. ராமகிருஷ்ணன்.
கட்சியை கவனிக்கணும்- திருமா
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு கட்சிப் பணியை கவனிப்பதுதான் ஓய்வு என்கிறார். பிரசாரத்திற்கு அலைந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறுகிறார்.
மூணு மணிநேரம்தான்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சரியாக துக்கம் இல்லை. தினசரி மூன்று மணிநேரம் மட்டுமே தூங்கினாராம் திருமாவளவன். முதல்ல நல்லா தூங்குங்க.. தூக்க கலக்கத்தில ஓட்டு போட மறந்துட்டீங்களே திருமா.