“தாமரை வெல்லட்டும்... தமிழகம் மலரட்டும்”... பாஜகவின் தேர்தல் "லோகோ" வெளியீடு
சென்னை: சட்டசபைத் தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் இலச்சினை (லோகா) வெளியிடப்பட்டுள்ளது. அதில், "மோடியின் படமும், தாமரை வெல்லட்டும், தமிழகம் மலரட்டும் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது பாஜக. விரைவில் இரண்டாம் பட்டியலை வெளியிட இருக்கிறது.
இந்நிலையில், பாஜகவின் தேர்தல் இலச்சினை சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், பிரதமர் மோடியின் படமும், கூடவே தாமரை வெல்லட்டும், தமிழகம் மலரட்டும் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
இந்தத் தேர்தல் இலட்சினை அறிமுக விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:-
கூட்டணி முயற்சி...
தேர்தலில் வாக்குகள் சிதற கூடாது என்பதால், கூட்டணி அமைக்க முயன்றோம். அது வெற்றி பெறவில்லை. ஆனால், பாஜக ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக நாங்கள் இருப்போம்.
அதிமுக அரசு...
அதிமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதிமுக ஆட்சியிலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம். அதைத் தொடரவுள்ளோம்.
வேட்பாளர் பட்டியல்...
மக்கள் நலக் கூட்டணியில் ஊழல் செய்தவர்கள் உள்ளதால், நல்லாட்சி தர முடியாது. வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து, பாஜக தலைமைக்கு அனுப்பி உள்ளோம். அவர்கள் இறுதி முடிவை எடுப்பர்.
அமித்ஷா...
திருச்சியில் விரைவில் நடைபெறும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார். தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பல மத்திய அமைச்சர்களும் பங்கேற்பர்' என்றார்.
பொன்.ராதா...
இந்த விழாவில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மேலிடப் பார்வையாளர் முரளிதர ராவ் மற்றும் பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.