தமிழக கேரள எல்லையில் பற்றி எரிந்த லாரி- ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்
செங்கோட்டை: தமிழக கேரளா எல்லையில் சோதனை சாவடி அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்ததில், அதில் இருந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் தமிழக கேரளா எல்லை ஆரியங்காவு வழியே 24மணி நேரமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் வாகனம் சபரிமலை நோக்கி சென்று வருகிறது. மேலும் தூத்துக்குடி துறைமுகம், விருதுநகர், மதுரை, சேலம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலை கேரளா மாநிலம் கோட்டையம் சேத்தலை என்ற பகுதியில் இருந்து ரப்பரால் ஆன கால்மிதியடிகள், மினரல் பவுடர், சோடியம் சிலிகேட் ஆயில், நைட்ரஜன் புரோக்ஸ் உள்ளிட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஏற்றிக்கொண்டு ஓட்டுனர் லட்சுமணன் என்பவர் தூத்துக்குடி நோக்கி வந்துள்ளார்.
ஆரியங்காவில் உள்ள வணிகவரித்துறை சோதனை சாவடியில் லாரியை நிறுத்தி விட்டு லாரியில் இருக்கும் பொருட்களுக்கான பில்களை எடுத்துக் கொண்டு, லட்சுமணன் பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது லாரியில் தீடீரென தீ பிடித்துள்ளது.
லாரியில் இருந்த பொருட்கள் அனைத்தும் எளிதில் தீ பற்றக் கூடியது என்பதால தீ மள மளவென லாரி முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தென்மலை, எடமன் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கவே, விரைந்து வந்த அவர்கள் சுமார் ஒருமணி நேரம் தீயை போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த அனைத்து பொருள்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின. இந்த சம்பவம் நடந்தபோது, மற்ற வாகனங்கள் அருகில் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து தென்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.