இலங்கை அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை... மேலும் தொடரும் மழை!
சென்னை: இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று தாழ்வு பகுதியாக மாறியுள்ளதால், தென் மாவட்டங்களில் இன்று பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வருடம் வடகிழக்கு மழை பொய்த்துப் போனது. போதிய மழையில்லாமல் விவசாயம் அடியோடு சரிந்தது.
குடிநீர் பஞ்சம்
பல மாவட்டங்களில் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த ஆண்டாவது போதிய மழை பெய்யவேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கத்திரி வெயில் என்கிற அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளது. அக்னி நட்சத்திரம் இந்த மாதம் 28-ந்தேதி வரை நீடிக்கிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தத் தொடங்கியது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
கோடை மழை
இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கியபோதிலும் மழை பெய்துவருவதால் வெயிலின் தன்மை குறைந்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், சென்னை மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் புயல் சின்னம்...
இந்த மழை தொடரும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், "வங்கக்கடலில் இலங்கைக்கு அப்பால் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறி இலங்கை அருகே உள்ளது.
இதன்காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் பலத்த மழை பெய்யும். பல இடங்களில் மழைபெய்யும். வடமாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.
மழை அளவு
நேற்று காலை 8-30மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:
குடவாசல், கமுதி, மைலாடி தலா 7 செ.மீ., பேரையூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, பெரியார் தலா 5 செ.மீ.
கலவை, கோத்தகிரி, நாகர்கோவில், ராசிபுரம் தலா 4 செ.மீ.
உத்தமபாளையம், பூதப்பாண்டி, உசிலம்பட்டி, குன்னூர், மன்னார்குடி, மேலூர், கூடலூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராதாபுரம், ஆலங்காயம், திருச்சுழி, மேட்டுப்பட்டி, காரைக்குடி, கடலூர், கீரனூர், ஆரணி, அரியலூர், கொடைக்கானல் தலா 2 செ.மீ.
திருவாடானை, ஆடுதுறை, பழனி, சின்னக்கள்ளார், தென்காசி, காவேரிப்பாக்கம், தக்கலை,வாடிப்பட்டி, அரண்மனைப்புதூர், நீடாமங்கலம், காமாட்சிபுரம், திருத்தணி, நாங்குனேரி தலா 1 செ.மீ.மழை பெய்துள்ளது.
-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.