திமுக படுதோல்வி: 'முட்டை' தான் கிடைத்தது!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வெற்றிக்காண காரணத்தை அறிவதை விட தோல்விக்கான காரணங்கள் என்ன என்றுதான் திமுக தலைவர்கள் ஆராயத்தொடங்கியுள்ளனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைவர் மு.கருணாநிதி, ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, நட்சத்திர பேச்சாளர் குஷ்பு என பலரும் லோக்சபா தேர்தலில் திமுகவிற்காகவும், கூட்டணி கட்சியினருக்காகவும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தனர்.
அதிமுக தனித்து களமிறங்கினாலும், திமுக கொஞ்சம் ஜாக்கிரதையாக உதிரிக்கட்சிகள், ஜாதிகட்சிகள் பலத்தில் தேர்தலை எதிர் கொண்டது.

ஸ்டாலின் ஸ்டைல்
நாடாளுமன்ற தேர்தலை ஸ்டாலின் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். ஒருபக்கம் ஆளுங்கட்சியின் அதிகாரம், மறுபக்கம் பாஜ தலைமையில் அமைந்த வானவில் கூட்டணி என, பிற கட்சிகளின் சவால்கள். மற்றொருபக்கம் ஸ்டாலினை மிரட்டியது.

அழகிரி அட்டாக்
தென்தமிழக திமுகவின் அதிகார சக்தியும் தனது சகோதரருமான அழகிரியால் கட்சியின் செல்வாக்கு சரிவு என்ற சவாலினை எதிர்கொள்ள ஸ்டாலின் முழுவீச்சில் பிரசாரம் செய்தார்.

வரவேற்பு இருந்தும் வாக்கு இல்லையே
ஸ்டாலின் போகும் இடமெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவை எல்லாம் வாக்குகளாக மாறும் என்று ஸ்டாலின் எண்ணியதுதான் மிகப்பெரிய தவறாகிவிட்டது.

அனல் காற்றில் அசராமல்
கோடை வெயிலிலும், அனல் காற்றிலும் அசராமல் 40 தொகுதிகளில் சுமார் 8500 கிலோமீட்டர் தூரத்தை வேனில் சென்று கடந்து பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின்.

பிரசாரத்தில் விளாசல்
ஸ்டாலின் பிரசாரத்திற்கு போன இடமெங்கும் மின்சார பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, அம்மா குடிநீர் பற்றி பேசினார். ஆளும்கட்சியை கடுமையாக தாக்கியதோடு ஜெயலலிதாவின் பிரசார பாணியை கிண்டலடித்தார்.

கருணாநிதியும் களத்தில்
திமுகவிற்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையை கருதிதான், 90 வயதான கருணாநிதியும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று திமுகவுக்கு ஆதரவு திரட்டினார்.

பணத்தை சுருட்டிய மா.செக்கள்
ஆனால் சில மாவட்டச் செயலாளர்களோ நமக்கென்ன வந்தது என்ற ரீதியில் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. சிலர் எதிர்கட்சியினருக்கு உதவிகரமாக செயல்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இது தேர்தல் முடிவில் பலமாக எதிரொலித்துள்ளது.

அழகிரி சாபம்
லோக்சபா தேர்தல் சமயத்தில் மு.க.அழகிரி அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கியதும் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக கூறப்படுகிறது. அழகிரி ஊர் ஊராக சென்று தனது ஆதரவாளர்களிடம் திமுக வேட்பாளர்களின் தோல்வி பற்றியே பிரசாரம் செய்தார்.

ஊழல் வேட்பாளர்கள்
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆ.ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்டவர்கள் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டது. அறிமுகமே இல்லாத வியாபாரிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சீட் கொடுக்கப்பட்டதாகவும் திமுக மீது குற்றம் சாட்டப்பட்டது.

திரும்பிய வரலாறு
கடந்த 2004 தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை படுதோல்வியை சந்தித்தது. அதேபோல பத்தாண்டுகளுக்குப் பின்னர் திமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. ஒரு இடத்தில் கூட அந்தக் கட்சி முன்னணியில் இல்லை.

மண்ணைக் கவ்வ காரணம்
ஈழத் தமிழர் பிரச்சினையும் திமுகவின் அஸ்தமனத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
அதேசமயம் திமுக படுதோல்வியை சந்தித்து மண்ணைக் கவ்வக் காரணம் திமுகவினர்தான் என்கின்றனர் அரசியல்நோக்கர்கள். ஆனால் ஜனநாயகம் தோல்வியடைந்து விட்டது பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்கின்றனர் திமுகவினர்.












Click it and Unblock the Notifications